விரும்பி யூறு பாடல் வரிகள் (virumpi yuru) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் எறும்பியூர் – திருவெறும்பூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : எறும்பியூர் – திருவெறும்பூர்
சுவாமி : எறும்பீஸ்வரர்
அம்பாள் : நறுங்குழல்நாயகியம்மை

விரும்பி யூறு

விரும்பி யூறு
விடேல்மட நெஞ்சமே
கரும்பி னூறல்கண்
டாய்கலந் தார்க்கவன்
இரும்பி னூறல
றாததோர் வெண்டலை
எறும்பி யூர்மலை
யானெங்க ளீசனே. 1

பிறங்கு செஞ்சடைப்
பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத
கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட
வாளொடு நாடொறும்
எறும்பி யூர்மலை
யானெங்க ளீசனே. 2

மருந்து வானவர்
தானவர்க் கின்சுவை
புரிந்த புன்சடைப்
புண்ணியன் கண்ணுதல்
பொருந்து பூண்முலை
மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை
யானெங்க ளீசனே. 3

நிறங்கொள் கண்டத்து
நின்மலன் எம்மிறை
மறங்கொள் வேற்கண்ணி
வாணுதல் பாகமாய்
அறம்பு ரிந்தருள்
செய்தவெம் அங்கணன்
எறும்பி யூர்மலை
யானெங்க ளீசனே. 4

நறும்பொன் நாண்மலர்க்
கொன்றையும் நாகமுந்
துறும்பு செஞ்சடைத்
தூமதி வைத்துவான்
உறும்பொன் மால்வரைப்
பேதையோ டூர்தொறும்
எறும்பி யூர்மலை
யானெங்க ளீசனே. 5

கறும்பி யூர்வன
ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன
மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர்
கூட்டகத் திட்டெனை
எறும்பி யூரரன்
செய்த இயற்கையே. 6

மறந்து மற்றிது
பேரிடர் நாடொறுந்
திறம்பி நீநினை
யேல்மட நெஞ்சமே
புறஞ்செய் கோலக்
குரம்பையி லிட்டெனை
எறும்பி யூரரன்
செய்த இயற்கையே. 7

இன்ப மும்பிறப்
பும்மிறப் பின்னொடு
துன்ப மும்முட
னேவைத்த சோதியான்
அன்ப னேயர
னேயென் றரற்றுவார்க்
கின்ப னாகும்
எறும்பியூ ரீசனே. 8

கண்ணி றைந்த
கனபவ ளத்திரள்
விண்ணி றைந்த
விரிசுடர்ச் சோதியான்
உண்ணி றைந்துரு
வாயுயி ராயவன்
எண்ணி றைந்த
எறும்பியூ ரீசனே. 9

நிறங்கொள் மால்வரை
ஊன்றி யெடுத்தலும்
நறுங்கு ழல்மட
வாள்நடுக் கெய்திட
மறங்கொள் வாளரக்
கன்வலி வாட்டினான்
எறும்பி யூர்மலை
எம்மிறை காண்மினே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment