வானவர்கள் தானவர்கள் பாடல் வரிகள் (vanavarkal tanavarkal) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்காளத்தி தலம் தொண்டைநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : தொண்டைநாடு
தலம் : திருக்காளத்திவானவர்கள் தானவர்கள்

வானவர்கள் தானவர்கள் வாதைபட
வந்ததொரு மாகடல்விடந்
தானமுது செய்தருள் புரிந்தசிவன்
மேவுமலை தன்னைவினவில்
ஏனமின மானினொடு கிள்ளைதினை
கொள்ளஎழி லார்க்கவணினாற்
கானவர்தம் மாமகளிர் கனகமணி
விலகுகா ளத்திமலையே. 1

முதுசினவில் அவுணர்புரம் மூன்றுமொரு
நொடிவரையின் மூளவெரிசெய்
சதுரர்மதி பொதிசடையர் சங்கரர்
விரும்புமலை தன்னைவினவில்
எதிரெதிர வெதிர்பிணைய எழுபொறிகள்
சிதறஎழி லேனமுழுத
கதிர்மணியின் வளரொளிகள் இருளகல
நிலவுகா ளத்திமலையே. 2

வல்லைவரு காளியைவ குத்துவலி
யாகிமிகு தாரகனைநீ
கொல்லென விடுத்தருள் புரிந்தசிவன்
மேவுமலை கூறிவினவில்
பல்பல இருங்கனி *பருங்கிமிக
வுண்டவை நெருங்கியினமாய்க்
கல்லதிர நின்றுகரு மந்திவிளை
யாடுகா ளத்திமலையே.

( * பருகி எனச்சொல்வது விகாரவகையாற் பருங்கியென நின்றது.) 3

வேயனைய தோளுமையொர் பாகமது
வாகவிடை யேறிசடைமேற்
தூயமதி சூடிசுடு காடில்நட
மாடிமலை தன்னைவினவில்
வாய்கலச மாகவழி பாடுசெயும்
வேடன்மல ராகுநயனங்
காய்கணையி னாலிடந் தீசனடி
கூடுகா ளத்திமலையே. 4

மலையின்மிசை தனில்முகில்போல் வருவதொரு
மதகரியை மழைபோலலறக்
கொலைசெய்துமை யஞ்சவுரி போர்த்தசிவன்
மேவுமலை கூறிவினவில்
அலைகொள்புனல் அருவிபல சுனைகள்வழி
யிழியவயல் நிலவுமுதுவேய்
கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை
சிந்துகா ளத்திமலையே. 5

பாரகம் விளங்கிய பகீரதன்
அருந்தவம் முயன்றபணிகண்
டாரருள் புரிந்தலைகொள் கங்கைசடை
யேற்றஅரன் மலையைவினவில்
வாரதர் இருங்குறவர் சேவலின்
மடுத்தவர் எரித்தவிறகிற்
காரகில் இரும்புகை விசும்புகமழ்
கின்றகா ளத்திமலையே. 6

ஆருமெதி ராதவலி யாகியச
லந்தரனை ஆழியதனால்
ஈரும்வகை செய்தருள் புரிந்தவன்
இருந்தமலை தன்னைவினவில்
ஊரும்அர வம்மொளிகொள் மாமணியு
மிழ்ந்தவையு லாவிவரலாற்
காரிருள் கடிந்துகன கம்மெனவி
ளங்குகா ளத்திமலையே. 7

எரியனைய சுரிமயிர் இராவணனை
யீடழிய எழில்கொள்விரலாற்
பெரியவரை யூன்றியருள் செய்தசிவன்
மேவுமலை பெற்றிவினவில்
வரியசிலை வேடுவர்கள் ஆடவர்கள்
நீடுவரை யூடுவரலாற்
கரியினொடு வரியுழுவை அரியினமும்
வெருவுகா ளத்திமலையே. 8

இனதளவி லிவனதடி யிணையுமுடி
யறிதுமென இகலுமிருவர்
தனதுருவம் அறிவரிய சகலசிவன்
மேவுமலை தன்னைவினவிற்
புனவர்புன மயிலனைய மாதரொடு
மைந்தரும ணம்புணரும்நாள்
கனகமென மலர்களணி வேங்கைகள்
நிலாவுகா ளத்திமலையே. 9

நின்றுகவ ளம்பலகொள் கையரொடு
மெய்யிலிடு போர்வையவரும்
நன்றியறி யாதவகை நின்றசிவன்
மேவுமலை நாடிவினவிற்
குன்றின்மலி துன்றுபொழில் நின்றகுளிர்
சந்தின்முறி தின்றுகுலவிக்
கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை
யாடுகா ளத்திமலையே. 10

காடதிட மாகநட மாடுசிவன்
மேவுகா ளத்திமலையை
மாடமொடு மாளிகைகள் நீடுவளர்
கொச்சைவயம் மன்னுதலைவன்
நாடுபல நீடுபுகழ் ஞானசம்
பந்தனுரை நல்லதமிழின்
பாடலொடு பாடுமிசை வல்லவர்கள்
நல்லர்பர லோகமெளிதே. 11

திருச்சிற்றம்பலம்

Leave a Comment