ஊனாய்உயிர் புகலாய்அக பாடல் வரிகள் (unayuyir pukalayaka) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருச்சுழியல் – திருச்சுழி தலம் பாண்டியநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : பாண்டியநாடு
தலம் : திருச்சுழியல் – திருச்சுழிஊனாய்உயிர் புகலாய்அக

ஊனாய்உயிர் புகலாய்அக
லிடமாய் முகில்பொழியும்
வானாய்வரு மதியாய்விதி
வருவானிடம் பொழிலின்
தேனாதரித் திசைவண்டினம்
மிழற்றுந்திருச் சுழியல்
நானாவிதம் நினைவார்தமை
நலியார்நமன் தமரே. 1

தண்டேர்மழுப் படையான்மழ
விடையான்எழு கடல்நஞ்
சுண்டேபுரம் எரியச்சிலை
வளைத்தான்இமை யவர்க்காத்
திண்டேர்மிசை நின்றானவன்
உறையுந்திருச் சுழியல்
தொண்டேசெய வல்லாரவர்
நல்லார்துயர் இலரே. 2

கவ்வைக்கடல் கதறிக்கொணர்
முத்தங்கரைக் கேற்றக்
கொவ்வைத்துவர் வாயார்குடைந்
தாடுந்திருச் சுழியல்
தெய்வத்தினை வழிபாடுசெய்
தெழுவாரடி தொழுவார்
அவ்வத்திசைக் கரசாகுவர்
அலராள்பிரி யாளே. 3

மலையான்மகள் மடமாதிட
மாகத்தவண் மற்றுக்
கொலையானையின் உரிபோர்த்தவெம்
பெருமான்றிருச் சுழியல்
அலையார்சடை யுடையானடி
தொழுவார்பழு துள்ளம்
நிலையார்திகழ் புகழால்நெடு
வானத்துயர் வாரே. 4

உற்றான்நமக் குயரும்மதிச்
சடையான்புலன் ஐந்துஞ்
செற்றார்திரு மேனிப்பெரு
மானூர்திருச் சுழியல்
பெற்றான்இனி துறையத்திறம்
பாமைத்திரு நாமங்
கற்றாரவர் கதியுட்செல்வர்
ஏத்தும்மது கடனே. 5

மலந்தாங்கிய பாசப்பிறப்
பறுப்பீர்துறைக் கங்கைச்
சலந்தாங்கிய முடியான்அமர்ந்
திடமாந்திருச் சுழியல்
நிலந்தாங்கிய மலராற்கொழும்
புகையால்நினைந் தேத்துந்
தலந்தாங்கிய புகழாம்மிகு
தவமாஞ்சது ராமே. 6

சைவத்தசெவ் வுருவன்றிரு
நீற்றன்னுரு மேற்றன்
கைவைத்தொரு சிலையால்அரண்
மூன்றும்மெரி செய்தான்
தெய்வத்தவர் தொழுதேத்திய
குழகன்றிருச் சுழியல்
மெய்வைத்தடி நினைவார்வினை
தீர்தல்லெளி தன்றே. 7

பூவேந்திய பீடத்தவன்
றானும்மடல் அரியுங்
கோவேந்திய வினயத்தொடு
குறுகப்புகல் அறியார்
சேவேந்திய கொடியானவன்
உறையுந்திருச் சுழியல்
மாவேந்திய கரத்தான்எம
சிரத்தான்றன தடியே. 8

கொண்டாடுதல் புரியாவரு
தக்கன்பெரு வேள்விச்
செண்டாடுதல் புரிந்தான்திருச்
சுழியற்பெரு மானைக்
குண்டாடிய சமண்ஆதர்கள்
குடைச்சாக்கியர் அறியா
மிண்டாடிய அதுசெய்தது
வானால்வரு விதியே. 9

நீரூர்தரு நிமிலன்றிரு
மலையார்க்கயல் அருகே
தேரூர்தரும் அரக்கன்சிரம்
நெரித்தான்றிருச் சுழியல்
பேரூரென உரைவானடி
பெயர்நாவலர் கோமான்
ஆரூரன தமிழ்மாலைபத்
தறிவார்துயர் இலரே.

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.

குறிப்பு: இப்பதிகப் பண் நட்டராகம் எனச் சில பதிப்புகளில் உள்ளது. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment