திருவும் வண்மையுந் பாடல் வரிகள் (tiruvum vanmaiyun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநின்றியூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருநின்றியூர்திருவும் வண்மையுந்

திருவும் வண்மையுந் திண்டிறல் அரசுஞ்
சிலந்தி யார்செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்க ணான்றனக் களித்த
வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன்
பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப்
பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்
தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித்
திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே. 1

அணிகொள் ஆடையம் பூண்மணி மாலை
அமுது செய்தமு தம்பெறு சண்டி
இணைகொள் ஏழெழு நூறிரு பனுவல்
ஈன்ற வன்றிரு நாவினுக் கரையன்
கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற
காத லின்னருள் ஆதரித் தடைந்தேன்
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே. 2

மொய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி
மூன்று நூறுவே தியரொடு நுனக்கு
ஒத்த பொன்மணிக் கலசங்க ளேந்தி
ஓங்கு நின்றியூர் என்றுனக் களிப்பப்
பத்தி செய்தவப் பரசுரா மற்குப்
பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன்
சித்தர் வானவர் தானவர் வணங்குஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே. 3

இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம்
எழுந்து தன்முலைக் கலசங்க ளேந்திச்
சுரபி பால்சொரிந் தாட்டிநின் பாதந்
தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப்
பரவி உள்கிவன் பாசத்தை அறுத்துப்
பரம வந்துநுன் பாதத்தை அடைந்தேன்
நிரவி நித்திலம் அத்தகு செம்பொன்
அளிக்குந் தென்றிரு நின்றியூ ரானே. 4

வந்தோர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
வான நாடுநீ ஆள்கென அருளிச்
சந்தி மூன்றிலுந் தாபரம் நிறுத்திச்
சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்குச்
சிந்து மாமணி அணிதிருப் பொதியிற்
சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே. 5

காது பொத்தரைக் கின்னரர் உழுவை
கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயங்
கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக்
கோல ஆல்நிழற் கீழறம் பகர
ஏதஞ் செய்தவர் எய்திய இன்பம்
யானுங் கேட்டுநின் இணையடி அடைந்தேன்
நீதி வேதியர் நிறைபுகழ் உலகில்
நிலவு தென்றிரு நின்றியூ ரானே. 6

கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்க
நலங்கொள் பாதம்நின் றேத்திய பொழுதே
பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற
பெற்றி கேட்டுநின் பொற்கழல் அடைந்தேன்
பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்
பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறும்
நிலவு தென்றிரு நின்றியூ ரானே. 7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment