திருவின் நாதனுஞ் பாடல் வரிகள் (tiruvin natanun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கானூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்கானூர்
சுவாமி : செம்மேனிநாயகர்
அம்பாள் : சிவயோகநாயகி

திருவின் நாதனுஞ்

திருவின் நாதனுஞ்
செம்மலர் மேலுறை
உருவ னாயுல
கத்தி னுயிர்க்கெலாங்
கருவ னாகி
முளைத்தவன் கானூரிற்
பரம னாய
பரஞ்சுடர் காண்மினே. 1

பெண்டிர் மக்கள்
பெருந்துணை நன்னிதி
உண்டின் றேயென்
றுகவன்மின் ஏழைகாள்
கண்டு கொண்மின்நீர்
கானூர் முளையினைப்
புண்ட ரீகப்
பொதும்பி லொதுங்கியே. 2

தாயத் தார்தமர்
நன்னிதி யென்னுமிம்
மாயத் தேகிடந்
திட்டு மயங்கிடேல்
காயத் தேயுளன்
கானூர் முளையினை
வாயத் தால்வணங்
கீர்வினை மாயவே. 3

குறியில் நின்றுண்டு
கூறையி லாச்சமண்
நெறியை விட்டு
நிறைகழல் பற்றினேன்
அறிய லுற்றிரேல்
கானூர் முளையவன்
செறிவு செய்திட்
டிருப்பதென் சிந்தையே. 4

பொத்தல் மண்சுவர்ப்
பொல்லாக் குரம்பையை
மெய்த்த னென்று
வியந்திடேல் ஏழைகாள்
சித்தர் பத்தர்கள்
சேர்திருக் கானூரில்
அத்தன் பாத
மடைதல் கருமமே. 5

கல்வி ஞானக்
கலைப்பொரு ளாயவன்
செல்வ மல்கு
திருக்கானூ ரீசனை
எல்லி யும்பக
லும்மிசை வானவா
சொல்லி டீர்நுந்
துயரங்கள் தீரவே. 6

நீரும் பாரும்
நெருப்பும் அருக்கனுங்
காரு மாருதங்
கானூர் முளைத்தவன்
சேர்வு மொன்றறி
யாது திசைதிசை
ஓர்வு மொன்றில
ரோடித் திரிவரே. 7

ஓமத் தோடயன்
மாலறி யாவணம்
வீமப் பேரொளி
யாய விழுப்பொருள்
காமற் காய்ந்தவன்
கானூர் முளைத்தவன்
சேமத் தாலிருப்
பாவதென் சிந்தையே. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று 9

வன்னி கொன்றை
எருக்கணிந் தான்மலை
உன்னி யேசென்
றெடுத்தவன் ஒண்டிறல்
தன்னை வீழத்
தனிவிரல் வைத்தவன்
கன்னி மாமதிற்
கானூர்க் கருத்தனே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment