Punarchi pathu lyrics in tamil

புணர்ச்சிப்பத்து (punarchi pathu lyrics in tamil)

 அருளியவர்  :  மாணிக்கவாசகர்
  தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
 நாடு : பாண்டியநாடு
 சிறப்பு: அத்துவித இலக்கணம்; ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்

சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை
வாளா தொழும்புகந்து
கடைபட்டேனை ஆண்டுகொண்ட
கருணாலயனைக் கருமால் பிரமன்
தடைபட் டின்னுஞ் சார மாட்டாத்
தன்னைத் தந்த என்னா ரமுதைப்
புடைபட் டிருப்ப தென்றுகொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 1

ஆற்ற கில்லேன் அடியேன் அரசே
அவனி தலத்தைம் புலனாய
சேற்றி லழுந்தாச் சிந்தைசெய்து
சிவனெம் பெருமானென்றேத்தி
ஊற்று மணல்போல் நெக்குநெக் குள்ளே
உருகி ஓலமிட்டுப்
போற்றிநிற்ப தென்றுகொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 2

நீண்டமாலும் அயனும் வெருவ
நீண்ட நெருப்பை விருப்பிலேனை
ஆண்டுகொண்ட என் ஆரமுதை
அள்ளுறுள்ளத் தடியார்முன்
வேண்டுந் தனையும் வாய்விட்டலறி
விரையார் மலர் தூவிப்
பூண்டு கிடப்ப தென்று கொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 3

அல்லிக் கமலத் தயனும் மாலும்
அல்லா தவரும் அமரர்கோனுஞ்
சொல்லிப் பரவும் நாமத் தானைச்
சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை
நிறையின் அமுதை அமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வ தென்றுகொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 4

திகழத் திகழும் அடியும் முடியுங்
காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்
அகழப் பறந்துங் காண மாட்டா
அம்மான் இம்மா நிலமுழுதும்
திகழப் பணிகொண்டென்னை ஆட்கொண்டு
ஆ ஆ என்ற நீர்மையெல்லாம்
புகழப் பெறுவ தென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 5

பரிந்து வந்து பரமானந்தம்
பண்டே அடியேற் கருள் செய்யப்
பிரிந்து போந்து பெருமா நிலத்தில்
அருமா லுற்றேன் என்றென்று
சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர்
உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப்
புரிந்து நிற்பதென்று கொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 6

நினையப்பிறருக் கரிய நெருப்பை
நீரைக் காலை நிலனை விசும்பைத்
தனையொப் பாரை யில்லாத் தனியை
நோக்கித் தழைத்துத் தழுத்தகண்டம்
கனையக் கண்ணீர் அருவி பாயக்
கையுங் கூப்பிக் கடிமலராற்
புனையப் பெறுவதென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 7

நெக்குநெக்குள் உருகி உருகி
நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி
நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச்
செக்கர்போலும் திருமேனி
திகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப்
புக்கு நிற்ப தென்றுகொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 8

தாதாய் மூவே ழுலகுக்குங்
தாயே நாயேன் தனையாண்ட
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே
பெருந்தேன் பில்க எப்போதும்
ஏதாம் மணியே என்றென்றேத்தி
இரவும் பகலும் எழிலார்பாதப்
போதாய்ந் தணைவதென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 9

காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங்
கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம்
மூப்பாய் மூவா முதலாய் நின்ற
முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பானே எம்பரமா என்று
பாடிப் பாடிப் பணிந்து பாதப்
பூப்போதணைவ தென்று கொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 10


Leave a Comment