Adhisayapathu Lyrics Tamil

அதிசயப்பத்து பாடல் வரிகள் (Adhisayapathu lyrics tamil)
அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு : பாண்டியநாடு
சிறப்பு: முத்தி இலக்கணம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்

வைப்பு மாடென்றும் மாணிக்கத் தொளியென்றும்
மனத்திடை உருகாதே
செப்பு நேர்முலை மடவரலியர்தங்கள்
திறத்திடை நைவேனை
ஒப்பிலாதான உவமனி லிறந்தன
ஒண்மலர்த் திருப்பாதத்து
அப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 1

நீதியாவன யாவையும் நினைக்கிலேன்
நினைப்பவ ரொடுங்கூடேன்
ஏதமே பிறந்திறந்துழல்வேன்றனை
என்னடி யானென்று
பாதி மாதொடுங் கூடிய பரம்பரன்
நிரந்தர மாய் நின்ற
ஆதிஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 2

முன்னை என்னுடை வல்வினை போயிட
முக்கண துடையெந்தை
தன்னை யாவரும் அறிவதற் கரியவன்
எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில்
இளமதியதுவைத்த
அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 3

பித்த னென்றெனை உலகவர் பகர்வ தோர்
காரணம்இதுகேளீர்
ஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும்
உபாயம தறியாமே
செத்துப் போய்அருநரகிடை வீழ்வதற்
கொருப்படு கின்றேனை
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 4

பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன்
பன்மலர் பறித்தேத்தேன்
குரவு வார் குழலார் திறத்தே நின்று
குடிகெடு கின்றேனை
இரவு நின்றெரி யாடிய எம்மிறை
எரிசடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 5

எண்ணிலேன் திருநாமவஞ் செழுத்தும்என்
ஏழைமை யதனாலே
நண்ணிலேன் கலைஞானிகள் தம்மொடு
நல்வினை நயவாதே
மண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற்
கொருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 6

பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும்
பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதிநின்று இடர்க்கடற்
சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த
பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 7

நீக்கி முன்னென்னைத் தன்னொடு
நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன
சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத்
தெழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 8

உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர்
எழுதரு நாற்றம் போல்
பற்றலாவ தோர் நிலையிலாப் பரம்பொருள்
அப்பொருள் பாராதே
பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும்
பித்தர்சொல் தெளியாமே
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே. 9

இருள்திணிந்தெழுந்திட்டதோர் வல்வினைச்
சிறுகுடி லிதுவித்தைப்
பொருளெனக்களித் தருநரகத்திடை
விழப்புகுகின்றேனைத்
தெருளும் மும்மதில் நொடிவரை யிடிதரச்
சினப்பதத் தொடுசெந்தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய
அதிசயங் கண்டாமே. 10

Leave a Comment