ஆசைப்பத்து பாடல் வரிகள்

திருச்சிற்றம்பலம் – Asaipathu thiruvasagam lyrics in tamil

கருடக்கொடியோன் காணமாட்டாக்
கழற்சே வடியென்னும்
பொருளைத் தந்திங் கென்னை யாண்ட
பொல்லா மணியேயோ
இருளைத் துரந்திட் டிங்கே வாவென்
றங்கே கூவும்
அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே. 1

மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை
என்பு தோல் போர்த்த
குப்பாயம்புக் கிருக்க கில்லேன்
கூவிக்கொள்ளாய் கோவேயோ
எப்பா லவர்க்கும் அப்பாலாம்என்
ஆரமு தேயோ
அப்பா காண ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே. 2

சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ்
சிறுகுடில் இது சிதையக்
கூவாய் கோவே கூத்தா காத்தாட்
கொள்ளுங் குருமணியே
தேவா தேவர்க் கரியானே சிவனே
சிறிதென் முகநோக்கி
ஆவா வென்ன ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே. 3

மிடைந்தெலும் பூத்தை மிக்கழுக் கூறல்
வீறிலி நடைக்கூடம்
தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன்
சோத்தம் எம்பெருமானே
உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி
உன்திரு மலர்ப்பாதம்
அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே. 4

அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி
அடியேனுடையாக்கை
புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்
விடையாய் பொடியாடீ
எளிவந்தென்னை ஆண்டுகொண்ட
என்னாரமுதேயோ
அளியேன் என்ன ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே. 5

எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்க
கில்லேன் இவ்வாழ்க்கை
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா
மலர்ச்சே வடியானே
முத்தா உன்றன் முகவொளி நோக்கி
முறுவல் நகைகாண
அத்தா சால ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே. 6

பாரோர் விண்ணோர் பரவியேத்தும்
பரனே பரஞ்சோதி
வாராய் வாரா வுலகந்தந்து
வந்தாட்கொள்வானே
பேராயிரமும் பரவித் திரிந்தெம்
பெருமான் என ஏத்த
ஆரா அமுதே ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே. 7

கையால் தொழுதுன் கழற்சே வடிகள்
கழுமத் தழுவிக்கொண்டு
எய்யா தென்றன்தலைமேல் வைத்தெம்
பெருமான் பெருமானென்று
ஐயா என்றன் வாயா லரற்றி
அழல்சேர் மெழுகொப்ப
ஐயாற் றரசே ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே. 8

செடியா ராக்கைத் திறமற வீசிச்
சிவபுரநகர்புக்குக்
கடியார் சோதி கண்டுகொண்டென்
கண்ணினை களிகூரப்
படிதா னில்லாப் பரம்பரனே உன்
பழஅடியார் கூட்டம்
அடியேன் காண ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே. 9

வெஞ்சேலனைய கண்ணார்தம்
வெகுளிவலையில் அகப்பட்டு
நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே
நானோர் துணைகாணேன்
பஞ்சேரடியாள் பாகத்தொருவா
பவளத் திருவாயால்
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே. 10

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு : பாண்டியநாடு

சிறப்பு: ஆத்தும இலக்கணம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

1 Comment

Leave a Comment