அடைக்கலப்பத்து பாடல் வரிகள்

திருச்சிற்றம்பலம் – Adaikalapathu Lyrics Tamil

செழுக்கமலத் திரளனநின்
சேவடி சேர்ந்தமைந்த
பழுத்தமனத் தடியருடன்
போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப்
பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன்
உடையாய்உன் அடைக்கலமே. 1

வெறுப்பனவே செய்யும் என்சிறு
மையைநின் பெருமையினால்
பொறுப்பவனே அராப் பூண்பவ
னேபொங்கு கங்கைசடைச்
செறுப்பவனே நின்திருவரு
ளால்என் பிறவியைவேர்
அறுப்பவனே உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 2

பெரும்பெருமான்என் பிறவியை
வேரறுத்துப் பெரும்பிச்சுத்
தரும்பெருமான் சதுரப்பெரு
மான் என் மனத்தினுள்ளே
வரும்பெருமான் மலரோன் நெடு
மாலறியாமல் நின்ற
அரும்பெருமான் உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 3

பொழிகின்ற துன்பப் புயல்வெள்
ளத்தில்நின் கழற்புணைகொண்
டிழிகின்ற அன்பர்கள் ஏறினர்
வான்யான் இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைபொரக்
காமச் சுறவெறிய
அழிகின்ற னன்உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 4

சுருள்புரி கூழையர் சூழலிற்
பட்டுன் திறம்மறந்திங்கு
இருள்புரி யாக்கையிலே கிடந்
தெய்த்தனன் மைத்தடங்கண்
வெருள்புரி மான்அன்ன நோக்கிதன்
பங்கவிண் ணோர்பெருமான்
அருள்புரி யாய்உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 5

மாழைமைப் பாவிய கண்ணியர்
வன்மத் திடவுடைந்து
தாழியைப் பாவு தயிர்போல்
தளர்ந்தேன் தடமலர்த்தாள்
வாழியெப் போதுவந் தெந்நாள்
வணங்குவன் வல்வினையேன்
ஆழியப் பாவுடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 6

மின்கணினார் நுடங்கும் இடையார்
வெகுளிவலையில் அகப்பட்டுப்
புன்கண னாய்ப்புரள் வேனைப்
புரளாமற் புகுந்தருளி
என்கணி லேஅமு தூறித்
தித்தித்தென் பிழைக்கிரங்கும்
அங்கண னேஉடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 7

மாவடு வகிரன்ன கண்ணிபங்
காநின் மலரடிக்கே
கூவிடு வாய்கும்பிக் கேயிடு
வாய்நின் குறிப்பறியேன்
பாவிடையாடு குழல்போற்
கரந்து பரந்ததுள்ளம்
ஆகெடு வேன்உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 8

பிறிவறி யாஅன்பர் நின்னருட்
பெய்கழல் தாளிணைக்கீழ்
மறிவறி யாச்செல்வம் வந்துபெற்
றார் உன்னை வந்திப்பதோர்
நெறியறி யேன்நின்னை யேஅறி
யேன்நின்னையே அறியும்
அறிவறி யேன்உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 9

வழங்குகின் றாய்க்குன் அருளார்
அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின் றேன்விக்கி னேன்வினை
யேன்என் விதியின்மையால்
தழங்கருந் தேனன்ன தண்ணீர்
பருகத்தந் துய்யக்கொள்ளாய்
அழுங்குகின் றேன்உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 10

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு : பாண்டியநாடு

சிறப்பு: பக்குவ நிண்ணயம்; கலவைப் பாட்டு.

Leave a Comment