Thirupandi Pathigam lyrics in tamil

திருப்பாண்டிப்பதிகம் (Thirupandi pathigam lyrics)

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு : பாண்டியநாடு

சிறப்பு: சிவானந்த விளைவு; கட்டளைக் கலித்துறை.

திருச்சிற்றம்பலம்

பருவரை மங்கைதன் பங்கரைப்
பாண்டியற் காரமுதாம்
ஒருவரை ஒன்றுமில்லாதவ
ரைக்கழற் போதிறைஞ்சித்
தெரிவர நின்றுருக் கிப்பரி
மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை யன்றி உருவறி
யா தென்றன் உள்ளமதே. 1

சதுரை மறந்தறி மால்கொள்வர்
சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி
கழுக்கடை கைப்பிடித்துக்
குதிரையின் மேல்வந்து கூடிடு
மேற்குடி கேடுகண்டீர்
மதுரையர் மன்னன் மறுபிறப்
போட மறித்திடுமே. 2

நீரின்ப வெள்ளத்துள் நீந்திக்
குளிக்கின்ற நெஞ்சங்கொண்டீர்
பாரின்ப வெள்ளங் கொளப்பரி
மேற்கொண்ட பாண்டியனார்
ஓரின்ப வெள்ளத்துருக்கொண்டு
தொண்டரை உள்ளங் கொண்டார்
பேரின்ப வெள்ளத் துட் பெய்கழ
லேசென்று பேணுமினே. 3

செறியும் பிறவிக்கு நல்லவர்
செல்லன்மின் தென்னன் நன்னாட்டு
இறைவன் கிளர்கின்ற காலமிக்
காலம் எக் காலத்துள்ளும்
அறிவொண் கதிர்வாள் உறைகழித்
தானந்த மாக்கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார்
புரள இருநிலத்தே. 4

காலமுண்டாகவே காதல்செய்
துய்மின் கருதரிய
ஞாலமுண்டானொடு நான்முகன்
வானவர் நண்ணரிய
ஆலமுண்டான்எங்கள் பாண்டிப்
பிரான்தன் அடியவர்க்கு
மூலபண்டாரம் வழங்குகின்
றான்வந்து முந்துமினே. 5

ஈண்டிய மாயா இருள்கெட
எப்பொரு ளும் விளங்கத்
தூண்டிய சோதியை மீனவ
னுஞ் சொல்ல வல்லன் அல்லன்
வேண்டிய போதே விலக்கிலை
வாய்தல் விரும்புமின்தாள்
பாண்டிய னாரருள் செய்கின்ற
முத்திப் பரிசிதுவே. 6

மாய வனப்பரி மேல்கொண்டு
மற்றவர் கைக்கொளலும்
போயறும் இப்பிறப் பென்னும்
பகைகள் புகுந்தவருக்
காய அரும்பெருஞ் சீருடைத்
தன்னருளே அருளுஞ்
சேய நெடுங்கொடைத் தென்னவன்
சேவடி சேர்மின்களே. 7

அழிவின்றி நின்றதோர் ஆனந்த
வெள்ளத் திடையழுத்திக்
கழிவில் கருணையைக் காட்டிக்
கடிய வினையகற்றிப்
பழமலம் பற்றறுத் தாண்டவன்
பாண்டிப் பெரும்பதமே
முழுதுல குந்தரு வான்கொடை
யேசென்று முந்துமினே. 8

விரவிய தீவினை மேலைப்
பிறப்புமுந் நீர்கடக்கப்
பரவிய அன்பரை என்புருக்
கும்பரம் பாண்டியனார்
புரவியின் மேல்வரப் புந்திக்
கொளப் பட்ட பூங்கொடியார்
மரவியல் மேல்கொண்டு தம்மையும்
தாம் அறியார் மறந்தே. 9

கூற்றைவென் றாங்கைவர் கோக்களையும்
வென்றிருந்தழகால்
வீற்றிருந் தான்பெருந் தேவியுந்
தானும் ஓர் மீனவன்பால்
ஏற்றுவந் தாருயி ருண்ட
திறலொற்றைச் சேவகனே
தேற்றமிலாதவர் சேவடி
சிக்கெனச் சேர்மின்களே. 10

Leave a Comment