தானலா துலக பாடல் வரிகள் (tanala tulaka) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவையாறு தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவையாறு
சுவாமி : செம்பொற்சோதீசுவரர்
அம்பாள் : அறம்வளர்த்தநாயகி

தானலா துலக

தானலா துலக மில்லை
சகமலா தடிமை யில்லை
கானலா தாட லில்லை
கருதுவார் தங்க ளுக்கு
வானலா தருளு மில்லை
வார்குழல் மங்கை யோடும்
ஆனலா தூர்வ தில்லை
ஐயனை யாற னார்க்கே. 1

ஆலலால் இருக்கை இல்லை
அருந்தவ முனிவர்க் கன்று
நூலலால் நொடிவ தில்லை
நுண்பொரு ளாய்ந்து கொண்டு
மாலுநான் முகனுங் கூடி
மலரடி வணங்க வேலை
ஆலலால் அமுத மில்லை
ஐயனை யாற னார்க்கே. 2

நரிபுரி சுடலை தன்னில்
நடமலால் நவிற்ற லில்லை
சுரிபுரி குழலி யோடுந்
துணையலால் இருக்கை யில்லை
தெரிபுரி சிந்தை யார்க்குத்
தெளிவலால் அருளு மில்லை
அரிபுரி மலர்கொண் டேத்தும்
ஐயனை யாற னார்க்கே. 3

தொண்டலாற் றுணையு மில்லை
தோலலா துடையு மில்லை
கண்டலா தருளு மில்லை
கலந்தபின் பிரிவ தில்லை
பண்டைநான் மறைகள் காணாப்
பரிசின னென்றென் றெண்ணி
அண்டவா னவர்கள் ஏத்தும்
ஐயனை யாற னார்க்கே. 4

எரியலா லுருவ மில்லை
ஏறலால் ஏற லில்லை
கரியலாற் போர்வை யில்லை
காண்டகு சோதி யார்க்குப்
பிரிவிலா அமரர் கூடிப்
பெருந்தகைப் பிரானென் றேத்தும்
அரியலாற் றேவி யில்லை
ஐயனை யாற னார்க்கே. 5

என்பலாற் கலனு மில்லை
எருதலா லூர்வ தில்லை
புன்புலால் நாறு காட்டிற்
பொடியலாற் சாந்து மில்லை
துன்பிலாத் தொண்டர் கூடித்
தொழுதழு தாடிப் பாடும்
அன்பலாற் பொருளு மில்லை
ஐயனை யாற னார்க்கே. 6

கீளலால் உடையு மில்லை
கிளர்பொறி யரவம் பைம்பூண்
தோளலாற் றுணையு மில்லை
தொத்தலர் கின்ற வேனில்
வேளலாற் காயப் பட்ட
வீரரு மில்லை மீளா
ஆளலாற் கைம்மா றில்லை
ஐயனை யாற னார்க்கே. 7

சகமலா தடிமை யில்லை
தானலாற் றுணையு மில்லை
நகமெலாந் தேயக் கையான்
நாண்மலர் தொழுது தூவி
முகமெலாங் கண்ணீர் மல்க
முன்பணிந் தேத்துந் தொண்டர்
அகமலாற் கோயி லில்லை
ஐயனை யாற னார்க்கே. 8

உமையலா துருவ மில்லை
உலகலா துடைய தில்லை
நமையெலா முடைய ராவர்
நன்மையே தீமை யில்லை
கமையெலா முடைய ராகிக்
கழலடி பரவுந் தொண்டர்க்
கமைவிலா அருள் கொடுப்பார்
ஐயனை யாற னார்க்கே. 9

மலையலா லிருக்கை யில்லை
மதித்திடா அரக்கன் றன்னைத்
தலையலால் நெரித்த தில்லை
தடவரைக் கீழ டர்த்து
நிலையிலார் புரங்கள் வேவ
நெருப்பலால் விரித்த தில்லை
அலையினார் பொன்னி மன்னும்
ஐயனை யாற னார்க்கே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment