பார்கொண்டு மூடிக் பாடல் வரிகள் (parkontu mutik) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கழுமலம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்கழுமலம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

பார்கொண்டு மூடிக்

பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட
ஞான்றுநின் பாதமெல்லாம்
நாலஞ்சு புள்ளினம் ஏந்தின
என்பர் நளிர்மதியங்
கால்கொண்ட வண்கைச் சடைவிரித்
தாடுங் கழுமலவர்க்
காளன்றி மற்றுமுண் டோ அந்த
ணாழி அகலிடமே. 1

கடையார் கொடிநெடு மாடங்க
ளெங்குங் கலந்திலங்க
உடையா னுடைதலை மாலையுஞ்
சூடி உகந்தருளி
விடைதா னுடையவவ் வேதியன்
வாழுங் கழுமலத்துள்
அடைவார் வினைக ளவையெள்க
நாடொறும் ஆடுவரே. 2

திரைவாய்ப் பெருங்கடல் முத்தங்
குவிப்ப முகந்துகொண்டு
நுரைவாய் நுளைச்சிய ரோடிக்
கழுமலத் துள்ளழுந்தும்
விரைவாய் நறுமலர் சூடிய
விண்ணவன் றன்னடிக்கே
வரையாப் பரிசிவை நாடொறும்
நந்தமை யாள்வனவே. 3

விரிக்கும் அரும்பதம் வேதங்க
ளோதும் விழுமியநூல்
உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர்
கேட்கில் உலகமுற்றும்
இரிக்கும் பறையொடு பூதங்கள்
பாடக் கழுமலவன்
நிருத்தம் பழம்படி யாடுங்
கழல்நம்மை ஆள்வனவே. 4

சிந்தித் தெழுமன மேநினை
யாமுன் கழுமலத்தைப்
பந்தித்த வல்வினை தீர்க்க
வல்லானைப் பசுபதியைச்
சந்தித்த கால மறுத்துமென்
றெண்ணி யிருந்தவர்க்கு
முந்தித் தொழுகழல் நாடொறும்
நந்தம்மை ஆள்வனவே. 5

நிலையும் பெருமையும் நீதியுஞ்
சால அழகுடைத்தாய்
அலையும் பெருவெள்ளத் தன்று
மிதந்தவித் தோணிபுரஞ்
சிலையில் திரிபுரம் மூன்றெரித்
தார்தங் கழுமலவர்
அலருங் கழலடி நாடொறும்
நந்தமை ஆள்வனவே. 6

முற்றிக் கிடந்துமுந் நீரின்
மிதந்துடன் மொய்த்தமரர்
சுற்றிக் கிடந்து தொழப்படு
கின்றது சூழரவந்
தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந்
துன்றிவெண் திங்கள்சூடுங்
கற்றைச் சடைமுடி யார்க்கிட
மாய கழுமலமே. 7

உடலும் உயிரும் ஒருவழிச்
செல்லும் உலகத்துள்ளே
அடையும் உனைவந் தடைந்தார்
அமரர் அடியிணைக்கீழ்
நடையும் விழவொடு நாடொறும்
மல்கும் கழுமலத்துள்
விடையன் தனிப்பதம் நாடொறும்
நந்தமை ஆள்வனவே. 8

பரவைக் கடல்நஞ்ச முண்டது
மில்லையிப் பார்முழுதும்
நிரவிக் கிடந்து தொழப்படு
கின்றது நீண்டிருவர்
சிரமப் படவந்து சார்ந்தார்
கழலடி காண்பதற்கே
அரவக் கழலடி நாடொறும்
நந்தமை ஆள்வனவே. 9

கரையார் கடல்சூழ் இலங்கையர்
கோன்றன் முடிசிதறத்
தொலையா மலரடி ஊன்றலும்
உள்ளம் விதிர்விதிர்த்துத்
தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன்
கழுமலங் காண்பதற்கே
அலையாப் பரிசிவை நாடொறும்
நந்தமை ஆள்வனவே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment