Senni Pathu Thiruvasagam Lyrics in Tamil

சென்னிப்பத்து (Senni Pathu Thiruvasagam)

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு : பாண்டியநாடு

சிறப்பு: சிவவிளைவு; ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்

தேவ தேவன்மெய்ச் சேவகன்
தென்பெ ருந்துறை நாயகன்
மூவ ராலும் அறியொணாமுத லாய
ஆனந்த மூர்த்தியான்
யாவ ராயினும் அன்பரன்றி அறியொ
ணாமலர்ச் சோதியான்
தூயமாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி
மன்னிச் சுடருமே. 1

அட்டமூர்த்தி அழகன்இன்னமு தாய
ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய்ச்சிவ லோகநாயகன் தென்பெ
ருந்துறைச் சேவகன்
மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம்
வைத்த அழகன்தன்
வட்ட மாமலர்ச் சேவடிக் கண்நம் சென்னி
மன்னி மலருமே. 2

நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன்
நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெருந் துறை மேய
சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங்
கொண்டெம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி
மன்னிப் பொலியுமே. 3

பத்தர் சூழப் பராபரன் பாரில்
வந்துபார்ப் பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான் தில்லை
மூதூர் நடஞ்செய்வான்
எத்தனாகிவந் தில்புகுந்தெமை ஆளுங்
கொண்டெம் பணிகொள்வான்
வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே. 4

மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்தி
டா வகை நல்கினான்
வேய தோளுமை பங்கன் எங்கள் திருப்பெ
ருந்துறை மேவினான்
காயத் துள்ளமு தூறஊறநீ கண்டு
கொள்ளென்று காட்டிய
சேய மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி
மன்னித் திகழுமே. 5

சித்தமே புகுந் தெம்மையாட் கொண்டு தீவி
னை கெடுத் துய்யலாம்
பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர்
கொய்து சேர்த்தலும்
முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்பு
றத்தெமை வைத்திடும்
அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி
மன்னி மலருமே. 6

பிறவி யென்னுமிக் கடலைநீந் தத்தன் பேர
ருள்தந் தருளினான்
அறவை யென்றடி யார்கள் தங்கள் அருட்கு
ழாம்புக விட்டுநல்
உறவு செய்தெனை உய்யக்கொண்ட பிரான்தன்
உண்மைப் பெருக்கமாம்
திறமை காட்டிய சேவடிக்கண்நம் சென்னி
மன்னித் திகழுமே. 7

புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய்த
னையொழி வித்திடும்
எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான் என்னு
டையப்பன் என்றென்று
தொழுத கையின ராகித் தூமலர்க் கண்கள்
நீர்மல்குந் தொண்டர்க்கு
வழுவி லாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி
மன்னி மலருமே. 8

வம்ப னாய்த்திரி வேனைவாவென்று வல்வி
னைப்பகை மாய்த்திடும்
உம்ப ரான்உல கூடறுத்தப் புறத்த
னாய் நின்ற எம்பிரான்
அன்பரானவர்க்கருளி மெய்யடி யார்கட்
கின்பந் தழைந்திடுஞ்
செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி
மன்னித் திகழுமே. 9

முத்த னைமுதற் சோதியைமுக்கண்
அப்பனை முதல் வித்தினைச்
சித்த னைச்சிவ லோகனைத்திரு நாமம்
பாடித் திரிதரும்
பத்தர் காள்இங்கே வம்மின்நீர் உங்கள் பாசந்
தீரப் பணிமினோ
சித்த மார்தருஞ் சேவடிக்கண்நம் சென்னி
மன்னித் திகழுமே. 10

Leave a Comment