Arputha Pathu Thiruvasagam Lyrics in Tamil

அற்புதப்பத்து (Arputha Pathu Thiruvasagam)

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு : பாண்டியநாடு

சிறப்பு: அனுபவம் ஆற்றாமை; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்

மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும்
ஆழியு ளகப்பட்டுத்
தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான்
தலைதடு மாறாமே
பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன்
பொன்னடி யிணைகாட்டி
மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர்
அற்புதம் விளம்பேனே. 1

ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர்
இயல்பொடும் வணங்காதே
சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந்
தலைதடு மாறாகிப்
போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து
பொற்கழலிணைகாட்டி
வேந்த னாய் வெளியே என்முன் நின்றதோர்
அற்புதம் விளம்பேனே. 2

நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து
நானென தெனும்மாயக்
கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக்
கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய
அரும்பொருள் அடியேனை
அடித்த டித்துஅக் காரமுன் தீற்றிய
அற்புதம் அறியேனே. 3

பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது
பொய்களே புகன்றுபோய்க்
கருங் குழலினார் கண்களால் ஏறுண்டு
கலங்கியே கிடப்பேனைத்
திருந்து சேவடிச் சிலம்பவை
சிலம்பிடத் திருவொடும் அகலாதே
அருந்து ணைவனாய் ஆண்டுகொண்
டருளிய அற்புதம் அறியனே. 4

மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும்
மங்கையர் தம்மோடுங்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு
குலாவிய திரிவேனை
வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட
மென்மலர்க் கழல்காட்டி
ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர்
அற்புதம் அறியேனே. 5

வணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது
மங்கையர் தம்மோடும்
பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத்
தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக்
குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல்
கோமளத் தொடுங்கூடி
அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே. 6

இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான்
இயல்பொடஞ் செழுத்தோதித்
தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான்
தடமுலை யார்தங்கள்
மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை
மலரடி யிணைகாட்டி
அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே. 7

ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின
இருவினை அறுத்தென்னை
ஓசையா லுணர் வார்க்குணர் வரியவன்
உணர்வுதந் தொளியாக்கிப்
பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன்
பரம்பெருங் கருணையால்
ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய
அற்புதம் அறியேனே. 8

பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான்
புழுத்தலை நாய்போல
இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங்
கிணங்கியே திரிவேனை
இச்ச கத்தரி அயனுமெட் டாததன்
விரைமலர்க் கழல்காட்டி
அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே. 9

செறியும் இப்பிறவிப் பிறப்பிவை நினையாது
செறிகுழலார் செய்யுங்
கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும்
உன்னியே கிடப்பேனை
இறைவன் எம்பிரான் எல்லையில்
லாததன் இணைமலர்க் கழல்காட்டி
அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே. 10

Leave a Comment