Kula Pathu Thiruvasagam Lyrics in Tamil

குலாப்பத்து (Kula pathu thiruvasagam lyrics)

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு : சோழநாடு காவிரி வடகரை

சிறப்பு: அனுபவம் இடையீடுபடாமை; கொச்சகக் கலிப்பா.

திருச்சிற்றம்பலம்

ஓடுங் கவந்தியுமே
உறவென்றிட் டுள்கசிந்து
தேடும் பொருளுஞ்
சிவன்கழலே எனத்தெளிந்து
கூடும் உயிரும்
குமண்டையிடக் குனித்தடியேன்
ஆடுங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 1

துடியேர் இடுகிடைத்
தூய்மொழியார் தோள்நசையால்
செடியேறு தீமைகள்
எத்தனையுஞ் செய்திடினும்
முடியேன் பிறவேன்
எனைத்தனதாள் முயங்குவித்த
அடியேன் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 2

என்புள் ளுருக்கி
இருவினையை ஈடழித்துத்
துன்பங் களைந்து
துவந்துவங்கள் தூய்மைசெய்து
முன்புள்ள வற்றை
முழுதழிய உள்புகுந்த
அன்பின் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 3

குறியும் நெறியும்
குணமுமிலார் குழாங்கள்தமைப்
பிரியும் மனத்தார்
பிறிவரிய பெற்றியனைச்
செறியுங் கருத்தில்
உருத்தமுதாஞ் சிவபதத்தை
அறியுங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 4

பேருங் குணமும்
பிணிப்புறும்இப் பிறவிதனைத்
தூரும் பரிசு
துரிசறுத்துத் தொண்ட ரெல்லாஞ்
சேரும் வகையாற்
சிவன்கருணைத் தேன்பருகி
ஆருங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 5

கொம்பில் அரும்பாய்க்
குவிமலராய்க் காயாகி
வம்பு பழுத்துடலம்
மாண்டிங்ஙன் போகாமே
நம்புமென் சிந்தை
நணுகும்வண்ணம் நானணுகும்
அம்பொன் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 6

மதிக்குந் திறலுடைய
வல்லரக்கன் தோள்நெரிய
மிதிக்குந் திருவடி
என் தலைமேல் வீற்றிருப்பக்
கதிக்கும் பசுபாசம்
ஒன்றுமிலோம் எனக்களித்திங்
கதிர்க்குங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 7

இடக்குங் கருமுருட்
டேனப்பின் கானகத்தே
நடக்குந் திருவடி
என்தலைமேல் நட்டமையால்
கடக்குந் திறல்ஐவர்
கண்டகர்தம் வல்லாட்டை
அடக்குங் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 8

பாழ்ச்செய் விளாவிப்
பயனிலியாய்க் கிடப்பேற்குக்
கீழ்ச்செய் தவத்தாற்
கிழியீடு நேர்பட்டுத்
தாட்செய்ய தாமரைச்
சைவனுக்கென் புன்தலையால்
ஆட்செய் குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 9

கொம்மை வரிமுலைக்
கொம்பனையாள் கூறனுக்குச்
செம்மை மனத்தால்
திருப்பணிகள் செய்வேனுக்கு
இம்மை தரும்பயன்
இத்தனையும் ஈங்கொழிக்கும்
அம்மை குலாத்தில்லை
ஆண்டானைக் கொண்டன்றே. 10

Leave a Comment