பொடியார் மேனியனே பாடல் வரிகள் (potiyar meniyane) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கடவூர் வீரட்டம் – திருக்கடவூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருக்கடவூர் வீரட்டம் – திருக்கடவூர்பொடியார் மேனியனே

பொடியார் மேனியனே
புரிநூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல்
வளர்கங்கையின் மங்கையொடுங்
கடியார் கொன்றையனே
கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே
எனக்கார்துணை நீயலதே. 1

பிறையா ருஞ்சடையாய்
பிரமன்றலை யிற்பலிகொள்
மறையார் வானவனே
மறையின்பொரு ளானவனே
கறையா ரும்மிடற்றாய்
கடவூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே
எனக்கார்துணை நீயலதே. 2

அன்றா லின்னிழற்கீழ்
அறம்நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர்
கொடுத்தாய்மறை யோனுக்குமான்
கன்றாருங் கரவா
கடவூர்த்திரு வீரட்டத்துள்
என்றா தைபெருமான்
எனக்கார்துணை நீயலதே. 3

போரா ருங்கரியின்
னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள்
ஒருபாகம் மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய்
கடவூர்தனுள் வீரட்டானத்
தாரா என்னமுதே
எனக்கார்துணை நீயலதே. 4

மையார் கண்டத்தினாய்
மதமாவுரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருள்
புகுந்தாயின்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா
கடவூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே
எனக்கார்துணை நீயலதே. 5

மண்ணீர் தீவெளிகால்
வருபூதங்க ளாகிமற்றும்
பெண்ணோ டாணலியாய்ப்
பிறவாவுரு ஆனவனே
கண்ணா ரும்மணியே
கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அண்ணா என்னமுதே
எனக்கார்துணை நீயலதே. 6

எரியார் புன்சடைமேல்
இளநாகம் அணிந்தவனே
நரியா ருஞ்சுடலை
நகுவெண்டலை கொண்டவனே
கரியார் ஈருரியாய்
கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே
எனக்கார்துணை நீயலதே. 7

வேறா உன்னடியேன்
விளங்குங்குழைக் காதுடையாய்
தேறேன் உன்னையல்லாற்
சிவனேயென் செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா
கடவூர்த்திரு வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய்
எனக்கார்துணை நீயலதே. 8

அயனோ டன்றரியும்
அடியும்முடி காண்பரிய
பயனே எம்பரனே
பரமாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய்
கடவூர்த்திரு வீரட்டத்துள்
அயனே என்னமுதே
எனக்கார்துணை நீயலதே. 9

காரா ரும்பொழில்சூழ்
கடவூர்த்திரு வீரட்டத்துள்
ஏரா ரும்மிறையைத்
துணையாஎழில் நாவலர்கோன்
ஆரூ ரன்னடியான்
அடித்தொண்டன் உரைத்ததமிழ்
பாரோ ரேத்தவல்லார்
பரலோகத் திருப்பாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

தேவியார் – அபிராமியம்மை. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment