பட்ட நெற்றியர் பாடல் வரிகள் (patta nerriyar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமணஞ்சேரி – திருமணஞ்சேரி (கீழை) தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருமணஞ்சேரி – திருமணஞ்சேரி (கீழை)
சுவாமி : அருள்வள்ளல்நாதர்
அம்பாள் : யாழினும் மென்மொழியம்மை

பட்ட நெற்றியர்

பட்ட நெற்றியர்
பாய்புலித் தோலினர்
நட்ட நின்று
நவில்பவர் நாடொறுஞ்
சிட்டர் வாழ்திரு
வார்மணஞ் சேரியெம்
வட்ட வார்சடை
யார்வண்ணம் வாழ்த்துமே. 1

துன்னு வார்குழ
லாளுமை யாளொடும்
பின்னு வார்சடை
மேற்பிறை வைத்தவர்
மன்னு வார்மணஞ்
சேரி மருந்தினை
உன்னு வார்வினை
யாயின ஓயுமே. 2

புற்றி லாடர
வாட்டும் புனிதனார்
தெற்றி னார்புரந்
தீயெழச் செற்றவர்
சுற்றி னார்மதில்
சூழ்மணஞ் சேரியார்
பற்றி னாரவர்
பற்றவர் காண்மினே. 3

மத்த மும்மதி
யும்வளர் செஞ்சடை
முத்தர் முக்குணர்
மூசர வம்மணி
சித்தர் தீவணர்
சீர்மணஞ் சேரியெம்
வித்தர் தாம்விருப்
பாரை விருப்பரே. 4

துள்ளு மான்மறி
தூமழு வாளினர்
வெள்ள நீர்கரந்
தார்சடை மேலவர்
அள்ள லார்வயல்
சூழ்மணஞ் சேரியெம்
வள்ள லார்கழல்
வாழ்த்தவாழ் வாவதே. 5

நீர்ப ரந்த
நிமிர்புன் சடையின்மேல்
ஊர்ப ரந்த
உரகம் அணிபவர்
சீர்ப ரந்த
திருமணஞ் சேரியார்
ஏர்ப ரந்தங்
கிலங்குசூ லத்தரே. 6

சுண்ணத் தர்சுடு
நீறுகந் தாடலார்
விண்ணத் தம்மதி
சூடிய வேதியர்
மண்ணத் தம்முழ
வார்மணஞ் சேரியார்
வண்ணத் தம்முலை
யாளுமை வண்ணரே. 7

துன்ன வாடையர்
தூமழு வாளினர்
பின்னு செஞ்சடை
மேற்பிறை வைத்தவர்
மன்னு வார்பொழில்
சூழ்மணஞ் சேரியெம்
மன்ன னார்கழ
லேதொழ வாய்க்குமே. 8

சித்தர் தேவர்கள்
மாலொடு நான்முகன்
புத்தர் தேரமண்
கையர் புகழவே
மத்தர் தாமறி
யார்மணஞ் சேரியெம்
அத்த னாரடி
யார்க்கல்ல லில்லையே. 9

கடுத்த மேனி
அரக்கன் கயிலையை
எடுத்த வனெடு
நீண்முடி பத்திறப்
படுத்த லுமணஞ்
சேரி யருளெனக்
கொடுத்த னன்கொற்ற
வாளொடு நாமமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment