Friday, February 13, 2026
HomeSivan Songsபடங்கொள் நாகஞ் சென்னி பாடல் வரிகள் | patankol nakan cenni Thevaram song lyrics...

படங்கொள் நாகஞ் சென்னி பாடல் வரிகள் | patankol nakan cenni Thevaram song lyrics in tamil

படங்கொள் நாகஞ் சென்னி பாடல் வரிகள் (patankol nakan cenni) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவெண்காடு தலம் சோழநாடு வடகரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவெண்காடுபடங்கொள் நாகஞ் சென்னி

படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்
பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறி
அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர்
மனைகள் தோறுந் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே. 1

இழித்து கந்தீர் முன்னை வேடம்
இமைய வர்க்கும் உரைகள் பேணா
தொழித்து கந்தீர் நீர்முன் கொண்ட
உயர்த வத்தை அமரர் வேண்ட
அழிக்க வந்த காம வேளை
அவனு டைய தாதை காண
விழித்து கந்த வெற்றி யென்னே
வேலை சூழ்வெண் காட னீரே. 2

படைகள் ஏந்திப் பாரி டமும்
பாதம் போற்ற மாதும் நீரும்
உடையோர் கோவ ணத்த ராகி
உண்மை சொல்லீர் உம்மை யன்றே
சடைகள் தாழக் கரணம் இட்டுத்
தன்மை பேசி இல்ப லிக்கு
விடைய தேறித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே. 3

பண்ணு ளீராய்ப் பாட்டு மானீர்
பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்
கண்ணு ளீராய்க் கருத்தி லும்மைக்
கருது வார்கள் காணும் வண்ணம்
மண்ணு ளீராய் மதியம் வைத்தீர்
வான நாடர் மருவி யேத்த
விண்ணு ளீராய் நிற்ப தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே. 4

குடமெ டுத்து நீரும் பூவுங்
கொண்டு தொண்டர் ஏவல் செய்ய
நடமெ டுத்தொன் றாடிப் பாடி
நல்கு வீர்நீர் புல்கும் வண்ணம்
வடமெ டுத்த கொங்கை மாதோர்
பாக மாக வார்க டல்வாய்
விடம்மி டற்றில் வைத்த தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே. 5

மாறு பட்ட வனத்த கத்தில்
மருவ வந்த வன்க ளிற்றைப்
பீறி இட்ட மாகப் போர்த்தீர்
பெய்ப லிக்கென் றில்லந் தோறுங்
கூறு பட்ட கொடியும் நீருங்
குலாவி ஏற்றை அடர ஏறி
வேறு பட்டுத் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே. 6

காத லாலே கருதுந் தொண்டர்
கார ணத்தீ ராகி நின்றே
பூதம் பாடப் புரிந்து நட்டம்
புவனி யேத்த ஆட வல்லீர்
நீதி யாக ஏழி லோசை
நித்த ராகிச் சித்தர் சூழ
வேத மோதித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே. 7

குரவு கொன்றை மதியம் மத்தங்
கொங்கை மாதர் கங்கை நாகம்
விரவு கின்ற சடையு டையீர்
விருத்த ரானீர் கருத்தில் உம்மைப்
பரவும் என்மேல் பழிகள் போக்கீர்
பாக மாய மங்கை யஞ்சி
வெருவ வேழஞ் செற்ற தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே. 8

மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர்
நிச்ச யத்தால் நினைப்பு ளார்பாற்
பாடுங் காட்டில் ஆடல் உள்ளீர்
பரவும் வண்ணம் எங்ங னேதான்
நாடுங் காட்டில் அயனும் மாலும்
நணுகா வண்ணம் அனலு மாய
வேடங் காட்டித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே. 9

விரித்த வேதம் ஓத வல்லார்
வேலை சூழ்வெண் காடு மேய
விருத்த னாய வேதன் றன்னை
விரிபொ ழிற்றிரு நாவ லூரன்
அருத்தி யாலா ரூரன் தொண்டன்
அடியன் கேட்ட மாலை பத்துந்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார்
செம்மை யாளர் வானு ளாரே. 10

திருச்சிற்றம்பலம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments