பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பாடல் வரிகள் (painkottu malarppunnaip) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருச்செங்காட்டங்குடி தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருச்செங்காட்டங்குடி
சுவாமி : கணபதீஸ்வரர்
அம்பாள் : திருகுழல் நன்மாது

பைங்கோட்டு மலர்ப்புன்னைப்

பைங்கோட்டு மலர்ப்புன்னைப்
பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத்
தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய
சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனலேந்தி
விளையாடும் பெருமானே 1

பொன்னம்பூங் கழிக்கானற்
புணர்துணையோ டுடன்வாழும்
அன்னங்காள் அன்றில்காள்
அகன்றும்போய் வருவீர்காள்
கன்னவில்தோள் சிறுத்தொண்டன்
கணபதீச் சரமேய
இன்னமுதன் இணையடிக்கீழ்
எனதல்லல் உரையீரே. 2

குட்டத்துங் குழிக்கரையுங்
குளிர்பொய்கைத் தடத்தகத்தும்
இட்டத்தால் இரைதேரும்
இருஞ்சிறகின் மடநாராய்
சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன்
செங்காட்டங் குடிமேய
வட்டவார் சடையார்க்கென்
வருத்தஞ்சென் றுரையாயே. 3

கானருகும் வயலருகுங்
கழியருகுங் கடலருகும்
மீனிரிய வருபுனலில்
இரைதேர்வெண் மடநாராய்
தேனமர்தார்ச் சிறுத்தொண்டன்
செங்காட்டங் குடிமேய
வானமருஞ் சடையார்க்கென்
வருத்தஞ்சென் றுரையாயே. 4

ஆரலாஞ் சுறவமேய்ந்
தகன்கழனிச் சிறகுலர்த்தும்
பாரல்வாய்ச் சிறுகுருகே
பயில்தூவி மடநாராய்
சீருலாஞ் சிறுத்தொண்டன்
செங்காட்டங் குடிமேய
நீருலாஞ் சடையார்க்கென்
நிலைமைசென் றுரையீரே. 5

குறைக்கொண்டார் இடர்தீர்த்தல்
கடனன்றே குளிர்பொய்கைத்
துறைக்கெண்டை கவர்குருகே
துணைபிரியா மடநாராய்
கறைக்கண்டன் பிறைச்சென்னி
கணபதீச்சரம் மேய
சிறுத்தொண்டன் பெருமான்சீர்
அருளொருநாள் பெறலாமே. 6

கருவடிய பசுங்கால்வெண்
குருகேயொண் கழிநாராய்
ஒருவடியாள் இரந்தாளென்
றொருநாட்சென் றுரையீரே
செருவடிதோட் சிறுத்தொண்டன்
செங்காட்டங் குடிமேய
திருவடிதன் திருவருளே
பெறலாமோ திறத்தவர்க்கே. 7

கூராரல் இரைதேர்ந்து
குளமுலவி வயல்வாழுந்
தாராவே மடநாராய்
தமியேற்கொன் றுரையீரே
சீராளன் சிறுத்தொண்டன்
செங்காட்டங் குடிமேய
பேராளன் பெருமான்றன்
அருளொருநாள் பெறலாமே. 8

நறப்பொலிபூங் கழிக்கானல்
நவில்குருகே யுலகெல்லாம்
அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென்
அலர்கோடல் அழகியதே
சிறப்புலவன் சிறுத்தொண்டன்
செங்காட்டங் குடிமேய
பிறப்பிலிபேர் பிதற்றிநின்
றிழக்கோவெம் பெருநலமே. 9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 10

செந்தண்பூம் புனல்பரந்த
செங்காட்டங் குடிமேய
வெந்தநீ றணிமார்பன்
சிறுத்தொண்ட னவன்வேண்ட
அந்தண்பூங் கலிக்காழி
அடிகளையே அடிபரவுஞ்
சந்தங்கொள் சம்பந்தன்
தமிழுரைப்போர் தக்கோரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment