முன்னவன் எங்கள்பிரான் பாடல் வரிகள் (munnavan enkalpiran) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் மண்ணிப்படிக்கரை – இலுப்பைப்பட்டு தலம் சோழநாடு வடகரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு வடகரை
தலம் : மண்ணிப்படிக்கரை – இலுப்பைப்பட்டுமுன்னவன் எங்கள்பிரான்

முன்னவன் எங்கள்பிரான்
முதற்காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான்
திருநீலமி டற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான்
மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான்
பழமண்ணிப் படிக்கரையே. 1

அண்ட கபாலஞ்சென்னி
அடிமேலல ரிட்டுநல்ல
தொண்டங் கடிபரவித்
தொழுதேத்திநின் றாடுமிடம்
வெண்டிங்கள் வெண்மழுவன்
விரையார்கதிர் மூவிலைய
பண்டங்கன் மேயவிடம்
பழமண்ணிப் படிக்கரையே. 2

ஆடுமின் அன்புடையீர்
அடிக்காட்பட்ட தூளிகொண்டு
சூடுமின் தொண்டருள்ளீர்
உமரோடெமர் சூழவந்து
வாடுமிவ் வாழ்க்கைதன்னை
வருந்தாமல் திருந்தச்சென்று
பாடுமின் பத்தருள்ளீர்
பழமண்ணிப் படிக்கரையே. 3

அடுதலை யேபுரிந்தான்
அவைஅந்தர மூவெயிலுங்
கெடுதலை யேபுரிந்தான்
கிளருஞ்சிலை நாணியிற்கோல்
*நடுதலை யேபுரிந்தான்
நரிகான்றிட்ட எச்சில்வெள்ளைப்
படுதலை யேபுரிந்தான்
பழமண்ணிப் படிக்கரையே.
(* அடுதலையே என்றும் பாடம்) 4

உங்கைக ளாற்கூப்பி
உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர்
மங்கையோர் கூறுடையான்
வானோர்முத லாயபிரான்
அங்கையில் வெண்மழுவன்
அலையார்கதிர் மூவிலைய
பங்கய பாதனிடம்
பழமண்ணிப் படிக்கரையே. 5

செடிபடத் தீவிளைத்தான்
சிலையார்மதில் செம்புனஞ்சேர்
கொடிபடு மூரிவெள்ளை
எருதேற்றையும் ஏறக்கொண்டான்
கடியவன் காலன்றன்னைக்
கறுத்தான்கழற் செம்பவளப்
படியவன் பாசுபதன்
பழமண்ணிப் படிக்கரையே. 6

கடுத்தவன் தேர்கொண்டோ
டிக் கயிலாயநன் மாமலையை
எடுத்தவன் ஈரைந்துவாய்
அரக்கன்முடி பத்தலற
விடுத்தவன் கைநரம்பால்
வேதகீதங்கள் பாடலுறப்
படுத்தவன் பால்வெண்ணீற்றன்
பழமண்ணிப் படிக்கரையே. 7

திரிவன மும்மதிலும்
எரித்தான்இமை யோர்பெருமான்
அரியவன் அட்டபுட்பம்
அவைகொண்டடி போற்றிநல்ல
கரியவன் நான்முகனும்
அடியும்முடி காண்பரிய
பரியவன் பாசுபதன்
பழமண்ணிப் படிக் கரையே. 8

வெற்றரைக் கற்றமணும்
விரையாதுவிண் டாலமுண்ணுந்
துற்றரைத் துற்றறுப்பான்
றுன்னஆடைத் தொழிலுடையீர்
பெற்றரைப் பித்தரென்று
கருதேன்மின் படிக்கரையுள்
பற்றரைப் பற்றிநின்று
பழிபாவங்கள் தீர்மின்களே. 9

பல்லுயிர் வாழுந்தெண்ணீர்ப்
பழமண்ணிப் படிக்கரையை
அல்லியந் தாமரைத்தார்
ஆரூரன் உரைத்ததமிழ்
சொல்லுதல் கேட்டல்வல்லா
ரவர்க்குந்தமர்க் குங்கிளைக்கும்
எல்லியும் நண்பகலும்
இடர்கூருதல் இல்லையன்றே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment