மலையினார் பருப்பதந் பாடல் வரிகள் (malaiyinar paruppatan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருஇலம்பையங்கோட்டூர் – எலுமியன்கோட்டூர் தலம் தொண்டைநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : தொண்டைநாடு
தலம் : திருஇலம்பையங்கோட்டூர் – எலுமியன்கோட்டூர்
சுவாமி : அரம்பேஸ்வரர்
அம்பாள் : கனககுஜாம்பிகை

மலையினார் பருப்பதந்

மலையினார் பருப்பதந் துருத்திமாற் பேறு
மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம்
நிலையினான் எனதுரை தனதுரை யாக
நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக்
கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும்
இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1

திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான்
தேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலை
நிருமலன் எனதுரை தனதுரை யாக
நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை
கதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும்
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 2

பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம்
பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளும்
காலனாம் எனதுரை தனதுரை யாகக்
கனலெரி அங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய
நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோங்கும்1
ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

பாடம் : 1 விண்டேங்கும் 3

உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன்
ஒற்றியூ ருறையும்அண் ணாமலை யண்ணல்
விளம்புவான் எனதுரை தனதுரை யாக
வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன்
குளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக்
கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள
இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 4

தேனுமாய் அமுதமாய்த் தெய்வமுந் தானாய்த்
தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில்
வானுமாம் எனதுரை தனதுரை யாக
வரிஅரா வரைக்கசைத் துழிதரு மைந்தன்
கானமான் வெருவுறக் கருவிர லூகங்
கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல்
ஏனமான் உழிதரும் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 5

மனமுலாம்2 அடியவர்க் கருள்புரி கின்ற
வகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர்
தனமிலான் எனதுரை தனதுரை யாகத்
தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன்
புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம்
பொன்னொடு மணிகொழித் தீண்டிவந் தெங்கும்
இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர்
இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே.

பாடம் : 2 மனமுலா 6

நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான்
நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும்
ஊருளான் எனதுரை தனதுரை யாக
ஒற்றைவெள் ளேறுகந் தேறிய வொருவன்
பாருளார் பாடலோ டாடல் அறாத
பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 7

வேருலாம் ஆழ்கடல் வருதிரை யிலங்கை
வேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில்
ஆருலாம் எனதுரை தனதுரை யாக
ஆகமோர் அரவணிந் துழிதரும் அண்ணல்
வாருலா நல்லன மாக்களுஞ் சார
வாரணம் உழிதரும் மல்லலங் கானல்
ஏருலாம் பொழிலணி3 இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

பாடம் : 3 ஏருலாம் பைம்பொழில் 8

கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன்
கீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லா
உளமழை யெனதுரை தனதுரை யாக
வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன்
வளமழை யெனக்கழை வளர்துளி சோர
மாசுண முழிதரு மணியணி மாலை
இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 9

உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி
உழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள்
பெருஞ்செல்வன் எனதுரை தனதுரை யாகப்
பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான்
கருஞ்சினை முல்லைநன் பொன்னடை வேங்கை
களிமுக வண்டொடு தேன்இனம் முரலும்
இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 10

கந்தனை மலிகனை கடலொலி யோதங்
கானலங் கழிவளர் கழுமலமென்னும்
நந்தியா ருறைபதி நால்மறை நாவன்
நற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன்
எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர்
இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய்
வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும்
வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment