மாசில் வீணையும் பாடல் வரிகள் (macil vinaiyum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் தனி தலம் பொதுப் பதிகங்கள் நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : பொதுப் பதிகங்கள்
தலம் : தனிமாசில் வீணையும்

மாசில் வீணையும்
மாலை மதியமும்
வீசு தென்றலும்
வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை
பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை
இணையடி நீழலே. 1

நமச்சி வாயவே
ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே
நானறி விச்சையும்
நமச்சி வாயவே
நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே
நன்னெறி காட்டுமே. 2

ஆளா காராளா
னாரை அடைந்துய்யார்
மீளா வாட்செய்து
மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளா தசுரை
யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண்
ணாகிக் கழிவரே. 3

நடலை வாழ்வுகொண்
டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது
சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு
துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந்
தூர்முனி பண்டமே. 4

பூக்கைக் கொண்டரன்
பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன்
நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை
தேடி அலமந்து
காக்கைக் கேயிரை
யாகிக் கழிவரே. 5

குறிக ளுமடை
யாளமுங் கோயிலும்
நெறிக ளுமவர்
நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம்
ஆரணம் ஓதிலும்
பொறியி லீர்மன
மென்கொல் புகாததே. 6

வாழ்த்த வாயும்
நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந்
தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர்
தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை
யேன்நெடுங் காலமே. 7

எழுது பாவைநல்
லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின்
றேனையுஞ் சூழ்ந்துகொண்
டுழுத சால்வழி
யேயுழு வான்பொருட்
டிழுதை நெஞ்சமி
தென்படு கின்றதே. 8

நெக்கு நெக்கு
நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன்
னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர்
பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்ப
ரவர்தம்மை நாணியே. 9

விறகிற் றீயினன்
பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன்
மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்
டுணர்வு கயிற்றினான்
முறுக வாங்கிக்
கடையமுன் னிற்குமே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment