குருந்தவன் குருகவன் பாடல் வரிகள் (kuruntavan kurukavan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமாற்பேறு – திருமால்பூர் தலம் தொண்டைநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : தொண்டைநாடு
தலம் : திருமாற்பேறு – திருமால்பூர்குருந்தவன் குருகவன்

குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே. 1

பாறணி வெண்டலை கையிலேந்தி
வேறணி பலிகொளும் வேட்கையனாய்
நீறணிந் துமையொரு பாகம்வைத்த
மாறிலி வளநகர் மாற்பேறே. 2

கருவுடை யாருல கங்கள்வேவச்
செருவிடை ஏறியுஞ் சென்றுநின்
றுருவுடை யாளுமை யாளுந்தானும்
மருவிய வளநகர் மாற்பேறே. 3

தலையவன் தலையணி மாலைபூண்டு
கொலைநவில் கூற்றினைக் கொன்றுகந்தான்
கலைநவின் றான்கயி லாயமென்னும்
மலையவன் வளநகர் மாற்பேறே. 4

துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும்
பிறையணி சடைமுடிப் பெண்ணொர்பாகன்
கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற
மறையவன் வளநகர் மாற்பேறே. 5

பெண்ணின்நல் லாளையொர் பாகம்வைத்துக்
கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன்
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்குநன் மாற்பேறே. 6

(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7

தீதிலா மலையெடுத் தவ்வரக்கன்
நீதியால் வேதகீ தங்கள்பாட
ஆதியா னாகிய அண்ணலெங்கள்
மாதிதன் வளநகர் மாற்பேறே. 8

செய்யதண் தாமரைக் கண்ணனொடுங்
கொய்யணி நறுமலர் மேலயனும்
ஐயன்நன் சேவடி அதனையுள்க
மையல்செய் வளநகர் மாற்பேறே. 9

குளித்துணா அமணர்குண் டாக்கரென்றுங்
களித்துநன் கழலடி காணலுற்றார்
முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி
வளைத்தவன் வளநகர் மாற்பேறே. 10

அந்தமில் ஞானசம் பந்தன்நல்ல
செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச்
சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார்
எந்தைதன் கழலடி எய்துவரே. 11

திருச்சிற்றம்பலம்

Leave a Comment