கண்பொலி நெற்றியினான் பாடல் வரிகள் (kanpoli nerriyinan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பனந்தாள் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பனந்தாள்
சுவாமி : செஞ்சடையப்பர்
அம்பாள் : பெரியநாயகியம்மை

கண்பொலி நெற்றியினான்

கண்பொலி நெற்றியினான் திகழ்
கையிலொர் வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகு
பீடுடை மால்விடையான்
விண்பொலி மாமதிசேர் தரு
செஞ்சடை வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாள் திருத்
தாடகை யீச்சரமே. 1

விரித்தவன் நான்மறையை மிக்க
விண்ணவர் வந்திறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள் இய
லேழுல கில்லுயிரும்
பிரித்தவன் செஞ்சடைமேல் நிறை
பேரொலி வெள்ளந்தன்னைத்
தரித்தவன் ஊர்பனந்தாள் திருத்
தாடகை யீச்சரமே. 2

உடுத்தவன் மானுரிதோல் கழ
லுள்கவல் லார்வினைகள்
கெடுத்தருள் செய்யவல்லான் கிளர்
கீதமொர் நான்மறையான்
மடுத்தவன் நஞ்சமுதா மிக்க
மாதவர் வேள்வியைமுன்
தடுத்தவன் ஊர்பனந்தாள் திருத்
தாடகை யீச்சரமே. 3

சூழ்தரு வல்வினையும் உடல்
தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல் மிக
ஏத்துமின் பாய்புனலும்
போழிள வெண்மதியும் அனல்
பொங்கர வும்புனைந்த
தாழ்சடை யான்பனந்தாள் திருத்
தாடகை யீச்சரமே. 4

விடம்படு கண்டத்தினான் இருள்
வெள்வளை மங்கையொடும்
நடம்புரி கொள்கையினான் அவன்
எம்மிறை சேருமிடம்
படம்புரி நாகமொடு திரை
பன்மணி யுங்கொணரும்
தடம்புனல் சூழ்பனந்தாள் திருத்
தாடகை யீச்சரமே. 5

விடையுயர் வெல்கொடியான் அடி
விண்ணொடு மண்ணுமெல்லாம்
புடைபட ஆடவல்லான் மிகு
பூதமார் பல்படையான்
தொடைநவில் கொன்றையொடு வன்னி
துன்னெருக் கும்மணிந்த
சடையவன் ஊர்பனந்தாள் திருத்
தாடகை யீச்சரமே. 6

மலையவன் முன்பயந்த மட
மாதையோர் கூறுடையான்
சிலைமலி வெங்கணையாற்
புரம்மூன்றவை செற்றுகந்தான்
அலைமலி தண்புனலும் மதி
ஆடரவும் மணிந்த
தலையவன் ஊர்பனந்தாள் திருத்
தாடகை யீச்சரமே. 7

செற்றரக் கன்வலியைத் திரு
மெல்விர லால் அடர்த்து
முற்றும்வெண் ணீறணிந்த திரு
மேனியன் மும்மையினான்
புற்றர வம்புலியின் னுரி
தோலொடு கோவணமும்
தற்றவன் ஊர்பனந்தாள் திருத்
தாடகை யீச்சரமே. 8

வின்மலை நாணரவம் மிகு
வெங்கனல் அம்பதனால்
புன்மைசெய் தானவர்தம் புரம்
பொன்றுவித் தான்புனிதன்
நன்மலர் மேலயனும் நண்ணும்
நாரணனும் மறியாத்
தன்மையன் ஊர்பனந்தாள் திருத்
தாடகை யீச்சரமே. 9

ஆதர் சமணரொடும் மடை
யைந்துகில் போர்த்துழலும்
நீதர் உரைக்குமொழி யவை
கொள்ளன்மின் நின்மலனூர்
போதவிழ் பொய்கைதனுள் திகழ்
புள்ளிரி யப்பொழில்வாய்த்
தாதவி ழும்பனந்தாள் திருத்
தாடகை யீச்சரமே. 10

தண்வயல் சூழ்பனந்தாள் திருத்
தாடகை யீச்சரத்துக்
கண்ணய லேபிறையான் அவன்
றன்னைமுன் காழியர்கோன்
நண்ணிய செந்தமிழால் மிகு
ஞானசம் பந்தன்நல்ல
பண்ணியல் பாடல்வல்லார் அவர்
தம்வினை பற்றறுமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment