கான றாத கடிபொழில் பாடல் வரிகள் (kana rata katipolil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருச்செம்பொன்பள்ளி – செம்பொனார்க்கோயில் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருச்செம்பொன்பள்ளி – செம்பொனார்க்கோயில்
சுவாமி : ஸ்வர்ணபுரீசுவரர்
அம்பாள் : சுகந்தவனநாயகி

கான றாத கடிபொழில்

கான றாத
கடிபொழில் வண்டினந்
தேன றாத
திருச்செம்பொன் பள்ளியான்
ஊன றாததோர்
வெண்டலை யிற்பலி
தான றாததோர்
கொள்கையன் காண்மினே. 1

என்பும் ஆமையும்
பூண்டங் குழிதர்வர்க்
கன்பு மாயிடும்
ஆயிழை யீரினிச்
செம்பொன் பள்ளியு
ளான்சிவ லோகனை
நம்பொன் பள்ளியுள்
கவினை நாசமே. 2

வேறு கோலத்தர்
ஆணலர் பெண்ணலர்
கீறு கோவண
வைதுகி லாடையர்
தேற லாவதொன்
றன்றுசெம் பொன்பள்ளி
ஆறு சூடிய
அண்ணல் அவனையே. 3

அருவ ராததோர்
வெண்டலை யேந்திவந்
திருவ ராயிடு
வார்கடை தேடுவார்
தெருவெ லாமுழல்
வார்செம்பொன் பள்ளியார்
ஒருவர் தாம்பல
பேருளர் காண்மினே. 4

பூவு லாஞ்சடை
மேற்புனல் சூடினான்
ஏவ லாலெயில்
மூன்றும் எரித்தவன்
தேவர் சென்றிறைஞ்
சுஞ்செம்பொன் பள்ளியான்
மூவ ராய்முத
லாய்நின்ற மூர்த்தியே. 5

சலவ ராயொரு
பாம்பொடு தண்மதிக்
கலவ ராவதன்
காரண மென்கொலோ
திலக நீண்முடி
யார்செம்பொன் பள்ளியார்
குலவி லாலெயில்
மூன்றெய்த கூத்தரே. 6

கைகொள் சூலத்தர்
கட்டுவாங் கத்தினர்
மைகொள் கண்டத்த
ராகி இருசுடர்
செய்ய மேனிவெண்
ணீற்றர்செம் பொன்பள்ளி
ஐயர் கையதோர்
ஐந்தலை நாகமே. 7

வெங்கண் நாகம்
வெருவுற ஆர்த்தவர்
பைங்கண் ஆனையின்
ஈருரி போர்த்தவர்
செங்கண் மால்விடை
யார்செம்பொன் பள்ளியார்
அங்க ணாயடைந்
தார்வினை தீர்ப்பரே. 8

நன்றி நாரணன்
நான்முக னென்றிவர்
நின்ற நீண்முடி
யோடடி காண்புற்றுச்
சென்று காண்பரி
யான்செம்பொன் பள்ளியான்
நின்ற சூழலில்
நீளெரி யாகியே. 9

திரியு மும்மதில்
செங்கணை யொன்றினால்
எரிய வெய்தன
லோட்டி இலங்கைக்கோன்
நெரிய வூன்றியிட்
டார்செம்பொன் பள்ளியார்
அரிய வானம்
அவரருள் செய்வரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment