கையது காலெரி பாடல் வரிகள் (kaiyatu kaleri) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவேதிகுடி தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவேதிகுடி
சுவாமி : வேதபுரீசுவரர்
அம்பாள் : மங்கையர்க்கரசியம்மை

கையது காலெரி

கையது காலெரி நாகங்
கனல்விடு சூலமது
வெய்யது வேலைநஞ் சுண்ட
விரிசடை விண்ணவர்கோன்
செய்யினில் நீல மணங்கம
ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை
நாமடைந் தாடுதுமே. 1

கைத்தலை மான்மறி யேந்திய
கையன் கனல்மழுவன்
பொய்த்தலை யேந்திநற் பூதி
யணிந்து பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக
ளுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை
நாமடைந் தாடுதுமே. 2

முன்பின் முதல்வன் முனிவனெம்
மேலை வினைகழித்தான்
அன்பின் நிலையில் அவுணர்
புரம்பொடி யானசெய்யுஞ்
செம்பொனை நன்மலர் மேலவன்
சேர்திரு வேதிகுடி
அன்பனை நம்மை யுடையனை
நாமடைந் தாடுதுமே. 3

பத்தர்கள் நாளும் மறவார்
பிறவியை யொன்றறுப்பான்
முத்தர்கள் முன்னம் பணிசெய்து
பாரிடம் முன்னுயர்த்தான்
கொத்தன கொன்றை மணங்கம
ழுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை
நாமடைந் தாடுதுமே. 4

ஆனணைந் தேறுங் குறிகுண
மாரறி வாரவர்கை
மானணைந் தாடு மதியும்
புனலுஞ் சடைமுடியன்
தேனணைந் தாடிய வண்டு
பயில்திரு வேதிகுடி
ஆனணைந் தாடு மழுவனை
நாமடைந் தாடுதுமே. 5

எண்ணும் எழுத்துங் குறியும்
அறிபவர் தாமொழியப்
பண்ணின் இசைமொழி பாடிய
வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும்
பிரான்றிரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை
நாமடைந் தாடுதுமே. 6

ஊர்ந்த விடையுகந் தேறிய
செல்வனை நாமறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையொர்
பாகம் மகிழ்ந்துடையான்
சேர்ந்த புனற்சடைச் செல்வப்
பிரான்றிரு வேதிகுடிச்
சார்ந்த வயலணி தண்ணமு
தையடைந் தாடுதுமே. 7

எரியும் மழுவினன் எண்ணியும்
மற்றொரு வன்றலையுள்
திரியும் பலியினன் தேயமும்
நாடுமெல் லாமுடையான்
விரியும் பொழிலணி சேறு
திகழ்திரு வேதிகுடி
அரிய அமுதினை அன்பர்க
ளோடடைந் தாடுதுமே. 8

மையணி கண்டன் மறைவிரி
நாவன் மதித்துகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய
வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணங்கம
ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை
நாமடைந் தாடுதுமே. 9

வருத்தனை வாளரக் கன்முடி
தோளொடு பத்திறுத்த
பொருத்தனைப் பொய்யா அருளனைப்
பூதப் படையுடைய
திருத்தனைத் தேவர் பிரான்றிரு
வேதி குடியுடைய
அருத்தனை ஆரா அமுதினை
நாமடைந் தாடுதுமே.

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment