இன்குர லிசைகெழும் பாடல் வரிகள் (inkura licaikelum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் சிவபுரம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : சிவபுரம்
சுவாமி : சிவகுருநாதசுவாமி
அம்பாள் : ஆர்யாம்பாள்

இன்குர லிசைகெழும்

இன்குர லிசைகெழும் யாழ்முரலத்
தன்கரம் மருவிய சதுரன்நகர்
பொன்கரை பொருபழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே. 1

அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட வுதைசெய்த புனிதன்நகர்
வென்றிகொள் ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே. 2

மலைமகள் மறுகிட மதகரியைக்
கொலைமல்க வுரிசெய்த குழகன்நகர்
அலைமல்கும் (*)அரிசிலி னதனயலே
சிலைமல்கு மதிலணி சிவபுரமே.

(*) அரிசில் என்பது ஒரு நதி. 3

மண்புன லனலொடு மாருதமும்
விண்புனை மருவிய விகிர்தன்நகர்
பண்புனை குரல்வழி வண்டுகெண்டிச்
செண்பக மலர்பொழிற் சிவபுரமே. 4

வீறுநன் குடையவள் மேனிபாகங்
கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்
நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்
தேறலுண் டெழுதரு சிவபுரமே. 5

மாறெதிர் வருதிரி புரமெரித்து
நீறது வாக்கிய நிமலன்நகர்
நாறுடை நடுபவர் உழவரொடுஞ்
சேறுடை வயலணி சிவபுரமே. 6

ஆவிலைந் தமர்ந்தவன் அரிவையொடு
மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான்
பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச்
சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே. 7

எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன்
முழுவலி யடக்கிய முதல்வன்நகர்
விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து
செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே. 8

சங்கள வியகையன் சதுர்முகனும்
அங்கள வறிவரி யவன்நகர்தான்
கங்குலும் பறவைகள் கமுகுதொறுஞ்
செங்கனி நுகர்தரு சிவபுரமே. 9

மண்டையின் குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய விமலன்நகர்
பண்டமர் தருபழங் காவிரியின்
தெண்டிரை பொருதெழு சிவபுரமே. 10

சிவனுறை தருசிவ புரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்
தவமல்கு தமிழிவை சொல்லவல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment