Yathirai pathu lyrics in tamil

யாத்திரைப் பத்து (Yathirai Pathu lyrics tamil)

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு : சோழநாடு காவிரி வடகரை

சிறப்பு: அனுபவாதீதம் உரைத்தல்;அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்

பூவார் சென்னி மன்னனெம் புயங்கப்
பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும்
வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன்பாய் ஆட்பட்
டீர்வந் தொருப்படுமின்
போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட்
டுடையான் கழல்புகவே. 1

புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப்
பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா
போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து நாயே
அனைய நமையாண்ட
தகவே யுடையான் தனைச்சாரத் தளரா
திருப்பார் தாந்தாமே. 2

தாமே தமக்குச் சுற்றமும் தாமே
தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார் என்ன
மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன்
குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன்
ஆள்வான் பொன்னடிக்கே. 3

அடியார் ஆனீர் எல்லீரும் அகல
விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண்
டிருமின் திருக்குறிப்பைச்
செடிசே ருடலைச் செலநீக்கிச் சிவலோ
கத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேனிப் புயங்கன்தன்
பூவார் கழற்கே புகவிடுமே. 4

விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர்
காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ
வதற்கே ஒருப் படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத் துள் அணியார்
கதவ தடையாமே
புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கன்
ஆள்வான் புகழ்களையே. 5

புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன்
தாளே புந்திவைத்திட்டு
இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர்
இடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று
சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம்
உருகி நிற்போமே. 6

நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம்
இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன்
ஆள்வான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும்
பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற்
கரியன் பெருமானே. 7

பெருமான் பேரானந்தத்துப் பிரியா
திருக்கப் பெற்றீர்காள்
அருமா லுற்றுப் பின்னைநீர் அம்மா
அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவம் திறந்த
போதே சிவபுரத்துத்
திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள்
சென்று சேர்வோமே. 8

சேரக் கருதிச் சிந்தனையைத் திருந்த
வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன்
புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத ஆர்வங்
கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற்
கிடந்து புரளாதே. 9

புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே
வந்தா ளாகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட்
கலங்கி மயங்குவீர்
தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ
கக்கோன் திருப்புயங்கன்
அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ
அந்தோ அந்தோவே. 10

Leave a Comment