வெள்ளநீர்ச் சடையர் பாடல் வரிகள் (vellanirc cataiyar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாலங்காடு – பழையனூர் தலம் தொண்டைநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : தொண்டைநாடு
தலம் : திருவாலங்காடு – பழையனூர்
சுவாமி : ஊர்த்ததாண்டவேசுவரர்
அம்பாள் : வண்டார்குழலியம்மை

வெள்ளநீர்ச் சடையர்

வெள்ளநீர்ச் சடையர் போலும்
விரும்புவார்க் கெளியர் போலும்
உள்ளுளே யுருகி நின்றங்
குகப்பவர்க் கன்பர் போலுங்
கள்ளமே வினைக ளெல்லாங்
கரிசறுத் திடுவர் போலும்
அள்ளலம் பழனை மேய
ஆலங்காட் டடிக ளாரே. 1

செந்தழ லுருவர் போலுஞ்
சினவிடை யுடையர் போலும்
வெந்தவெண் ணீறு கொண்டு
மெய்க்கணிந் திடுவர் போலும்
மந்தமாம் பொழிற் பழனை
மல்கிய வள்ளல் போலும்
அந்தமில் அடிகள் போலும்
ஆலங்காட் டடிக ளாரே. 2

கண்ணினாற் காம வேளைக்
கனலெழ விழிப்பர் போலும்
எண்ணிலார் புரங்கள் மூன்று
மெரியுணச் சிரிப்பர் போலும்
பண்ணினார் முழவ மோவாப்
பைம்பொழிற் பழனை மேய
அண்ணலார் எம்மை யாளும்
ஆலங்காட் டடிக ளாரே. 3

காறிடு விடத்தை யுண்ட
கண்டரெண் தோளர் போலுந்
தூறிடு சுடலை தன்னிற்
சுண்ணவெண் ணீற்றர் போலுங்
கூறிடு முருவர் போலுங்
குளிர்பொழிற் பழனை மேய
ஆறிடு சடையர் போலும்
ஆலங்காட் டடிக ளாரே. 4

பார்த்தனோ டமர் பொருது
பத்திமை காண்பர் போலுங்
கூர்த்தவா யம்பு கோத்துக்
குணங்களை அறிவர் போலும்
பேர்த்துமோ ராவ நாழி
அம்போடுங் கொடுப்பர் போலுந்
தீர்த்தமாம் பழனை மேய
திருவாலங் காட னாரே. 5

வீட்டினார் சுடுவெண் ணீறு
மெய்க்கணிந் திடுவர் போலுங்
காட்டில்நின் றாடல் பேணுங்
கருத்தினை யுடையர் போலும்
பாட்டினார் முழவ மோவாப்
பைம்பொழிற் பழனை மேயார்
ஆட்டினார் அரவந் தன்னை
ஆலங்காட் டடிக ளாரே. 6

தாளுடைச் செங்க மலத்
தடங்கொள்சே வடியர் போலும்
நாளுடைக் காலன் வீழ
உதைசெய்த நம்பர் போலுங்
கோளுடைப் பிறவி தீர்ப்பார்
குளிர்பொழிற் பழனை மேய
ஆளுடை யண்ணல் போலும்
ஆலங்காட் டடிக ளாரே. 7

கூடினார் உமைதன் னோடே
குறிப்புடை வேடங் கொண்டு
சூடினார் கங்கை யாளைச்
சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாம வேதம்
பைம்பொழிற் பழனை மேயார்
ஆடினார் காளி காண
ஆலங்காட் டடிக ளாரே. 8

வெற்றரைச் சமண ரோடு
விலையுடைக் கூறை போர்க்கும்
ஒற்றரைச் சொற்கள் கொள்ளார்
குணங்களை உகப்பர் போலும்
பெற்றமே உகந்தங் கேறும்
பெருமையை யுடையர் போலும்
அற்றங்கள் அறிவர் போலும்
ஆலங்காட் டடிக ளாரே. 9

மத்தனாய் மலையெ டுத்த
அரக்கனைக் கரத்தோ டொல்க
ஒத்தினார் திருவி ரலால்
ஊன்றியிட் டருள்வர் போலும்
பத்தர்தம் பாவந் தீர்க்கும்
பைம்பொழிற் பழனை மேய
அத்தனார் நம்மை யாள்வார்
ஆலங்காட் டடிக ளாரே.

இத்தலம் தொண்டை நாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment