வாரார் கொங்கை மாதோர் பாடல் வரிகள் (varar konkai mator) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் குடந்தைக்காரோணம் – கும்பகோணம் (விஸ்வநாதர் கோவில்) தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : குடந்தைக்காரோணம் – கும்பகோணம் (விஸ்வநாதர் கோவில்)
சுவாமி : சோமநாதர்
அம்பாள் : சோமசுந்தரி

வாரார் கொங்கை மாதோர்

வாரார் கொங்கை மாதோர்
பாக மாக வார்சடை
நீரார் கங்கை திங்கள்
சூடி நெற்றி யொற்றைக்கண்
கூரார் மழுவொன் றேந்தி
யந்தண் குழகன் குடமூக்கில்
காரார் கண்டத் தெண்டோள்
எந்தை காரோ ணத்தாரே. 1

முடியார் மன்னர் மடமான்
விழியார் மூவுல கும்மேத்தும்
படியார் பவள வாயார்
பலரும் பரவிப் பணிந்தேத்தக்
கொடியார் விடையார் மாட
வீதிக் குடந்தைக் குழகாரும்
கடியார் சோலைக் கலவ
மயிலார் காரோ ணத்தாரே. 2

மலையார் மங்கை பங்கர்
அங்கை அனலர் மடலாரும்
குலையார் தெங்கு குளிர்கொள்
வாழை யழகார் குடமூக்கில்
முலையா ரணிபொன் முளைவெண்
நகையார் மூவா மதியினார்
கலையார் மொழியார் காதல்
செய்யுங் காரோ ணத்தாரே. 3

போதார் புனல்சேர் கந்தம்
உந்திப் பொலியவ் வழகாரும்
தாதார் பொழில்சூழ்ந் தெழிலார்
புறவி லந்தண்குட மூக்கில்
மாதார் மங்கை பாக
மாக மனைகள் பலிதேர்வார்
காதார் குழையர் காள
கண்டர் காரோ ணத்தாரே. 4

பூவார் பொய்கை அலர்தா
மரைசெங் கழுநீர் புறவெல்லாம்
தேவார் சிந்தை அந்த ணாளர்
சீரா லடிபோற்றக்
கூவார் குயில்கள் ஆலும்
மயில்கள் இன்சொற் கிளிப்பிள்ளை
காவார் பொழில்சூழ்ந் தழகார்
குடந்தைக் காரோ ணத்தாரே. 5

மூப்பூர் நலிய நெதியார்
விதியாய் முன்னே அனல்வாளி
கோப்பார் பார்த்தன் நிலைகண்
டருளுங் குழகர் குடமூக்கில்
தீர்ப்பா ருடலில் அடுநோய
அவலம் வினைகள் நலியாமைக்
காப்பார் காலன் அடையா
வண்ணங் காரோணத்தாரே. 6

ஊனார் தலைகை யேந்தி
யுலகம் பலிதேர்ந் துழல்வாழ்க்கை
மானார் தோலார் புலியி
னுடையார் கரியின் னுரிபோர்வை
தேனார் மொழியார் திளைத்தங்
காடித் திகழுங் குடமூக்கில்
கானார் நட்டம் உடையார்
செல்வக் காரோ ணத்தாரே. 7

வரையார் திரள்தோள் மதவா
ளரக்கன் எடுப்ப மலைசேரும்
விரையார் பாதம் நுதியா
லூன்ற நெரிந்து சிரம்பத்தும்
உரையார் கீதம் பாடக்
கேட்டங் கொளிவாள் கொடுத்தாரும்
கரையார் பொன்னி சூழ்தண்
குடந்தைக் காரோ ணத்தாரே. 8

கரிய மாலுஞ் செய்ய
பூமேல் அயனுங் கழறிப்போய்
அரிய அண்டந் தேடிப்
புக்கும் அளக்க வொண்கிலார்
தெரிய அரிய தேவர்
செல்வந் திகழுங் குடமூக்கில்
கரிய கண்டர் கால
காலர் காரோ ணத்தாரே. 9

நாணார் அமணர் நல்ல
தறியார் நாளுங் குரத்திகள்
பேணார் தூய்மை1 மாசு
கழியார் பேச லவரோடும்
சேணார் மதிதோய் மாட
மல்கு செல்வ நெடுவீதிக்
கோணா கரமொன் றுடையார்
குடந்தைக் காரோ ணத்தாரே.

பாடம் : 1 தாமெய் 10

கருவார் பொழில்சூழ்ந் தழகார்
செல்வக் காரோ ணத்தாரைத்
திருவார் செல்வம் மல்கு
சண்பைத் திகழுஞ் சம்பந்தன்
உருவார் செஞ்சொல் மாலையிவைபத்
துரைப்பா ருலகத்துக்
கருவா ரிடும்பைப் பிறப்ப
தறுத்துக் கவலை கழிவாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment