திரைதரு பவளமுஞ் பாடல் வரிகள் (tiraitaru pavalamun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் மகேந்திரபள்ளி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : மகேந்திரபள்ளி
சுவாமி : திருமேனியழகர்
அம்பாள் : வடிவாம்பிகையம்மை

திரைதரு பவளமுஞ்

திரைதரு பவளமுஞ்
சீர்திகழ் வயிரமுங்
கரைதரும் அகிலொடு
கனவளை புகுதரும்
வரைவிலால் எயிலெய்த
மயேந்திரப் பள்ளியுள்
அரவரை அழகனை
அடியிணை பணிமினே. 1

கொண்டல்சேர் கோபுரங்
கோலமார் மாளிகை
கண்டலுங் கைதையுங்
கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி
மயேந்திரப் பள்ளியுள்
செண்டுசேர் விடையினான்
திருந்தடி பணிமினே. 2

கோங்கிள வேங்கையுங்
கொழுமலர்ப் புன்னையுந்
தாங்குதேன் கொன்றையுந்
தகுமலர்க் குரவமு
மாங்கரும் பும்வயல்
மயேந்திரப் பள்ளியுள்
ஆங்கிருந் தவன்கழல்
அடியிணை பணிமினே. 3

வங்கமார் சேணுயர்
வருகுறி யான்மிகு
சங்கமார் ஒலிஅகில்
தருபுகை கமழ்தரும்
மங்கையோர் பங்கினன்
மயேந்திரப் பள்ளியுள்
எங்கள்நா யகன்றன
திணையடி பணிமினே. 4

நித்திலத் தொகைபல
நிரைதரு மலரெனச்
சித்திரப் புணரிசேர்த்
திடத்திகழ்ந் திருந்தவன்
மைத்திகழ் கண்டன்நன்
மயேந்திரப் பள்ளியுள்
கைத்தல மழுவனைக்
கண்டடி பணிமினே. 5

சந்திரன் கதிரவன்
தகுபுகழ் அயனொடும்
இந்திரன் வழிபட
இருந்தஎம் மிறையவன்
மந்திர மறைவளர்
மயேந்திரப் பள்ளியுள்
அந்தமில் அழகனை
அடிபணிந் துய்ம்மினே. 6

சடைமுடி முனிவர்கள்
சமைவொடும் வழிபட
நடம்நவில் புரிவினன்
நறவணி மலரொடு
படர்சடை மதியினன்
மயேந்திரப் பள்ளியுள்
அடல்விடை யுடையவன்
அடிபணிந் துய்ம்மினே. 7

சிரமொரு பதுமுடைச்
செருவலி யரக்கனைக்
கரமிரு பதுமிறக்
கனவரை யடர்த்தவன்
மரவமர் பூம்பொழில்
மயேந்திரப் பள்ளியுள்
அரவமர் சடையனை
அடிபணிந் துய்ம்மினே. 8

நாகணைத் துயில்பவன்
நலமிகு மலரவன்
ஆகணைந் தவர்கழல்
அணையவும் பெறுகிலர்
மாகணைந் தலர்பொழில்
மயேந்திரப் பள்ளியுள்
யோகணைந் தவன்கழல்
உணர்ந்திருந் துய்ம்மினே. 9

உடைதுறந் தவர்களும்
உடைதுவர் உடையரும்
படுபழி யுடையவர்
பகர்வன விடுமின்நீர்
மடைவளர் வயலணி
மயேந்திரப் பள்ளியுள்
இடமுடை ஈசனை
இணையடி பணிமினே. 10

வம்புலாம் பொழிலணி
மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழலடி
ஞானசம் பந்தன்சொல்
நம்பர மிதுவென
நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள
உயர்பதி அணைவரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment