Thirukazhukundra pathigam in tamil

திருக்கழுக்குன்றப் பதிகம் – திருச்சிற்றம்பலம் (thirukazhukundra pathigam)

பிணக்கிலாத பெருந்துறைப்பெரு
மான் உன்நாமங்கள் பேசுவார்க்
கிணக்கிலாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கிலாததோர் வித்துமேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து
காட்டினாய் கழுக்குன்றிலே. 1

பிட்டு நேர்பட மண் சுமந்த
பெருந்துறைப்பெரும் பித்தனே
சட்டநேர்பட வந்திலாத
சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்
சிட்டனே சிவலோகனேசிறு
நாயினுங்கடையாய வெங்
கட்டனேனையும் ஆட்கொள்வான்வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே. 2

மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி
மலங்கெடுத்த பெருந்துறை
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி
மேல் விளைவதறிந்திலேன்
இலங்குகின்றநின்சேவடிகள்
இரண்டும் வைப்பிடமின்றியே
கலங்கினேன் கலங்காமலேவந்து
காட்டினாய் கழுக்குன்றிலே. 3

பூணொணாததொரன்பு பூண்டு
பொருந்திநாள்தொறும் போற்ற வும்
நாணொணாததொர்நாணம் எய்தி
நடுக்கடலுள் அழுந்திநான்
பேணொணாதபெருந்துறைப்பெருந்
தோணிபற்றியுகைத்தலுங்
காணொணாத்திருக்கோலம் நீவந்து
காட்டினாய் கழுக்குன்றிலே. 4

கோலமேனிவராக மேகுணமாம்
பெருந்துறைக்கொண்டலே
சீலமேதும் அறிந்திலாத என்
சிந்தை வைத்த சிகாமணி
ஞாலமேகரியாக நானுனை
நச்சி நச்சிட வந்திடுங்
காலமேஉனை ஓதநீ வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே. 5

பேதம் இல்லதோர் கற்பளித்த
பெருந்துறைப் பெருவெள்ளமே
ஏதமேபல பேசநீஎனை
ஏதிலார் முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமையற்ற
தனிச்சரண் சரணாமெனக்
காதலால் உனைஓதநீ வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே. 6

இயக்கி மாரறு பத்து நால்வரை
எண்குணம்செய்த ஈசனே
மயக்க மாயதொர் மும்மலப்பழ
வல்வினைக்குள் அழுந்தவும்
துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின்
தூய்மலர்க்கழல் தந்தெனைக்
கயக்க வைத்தடி யார்முனேவந்து
காட்டினாய் கழுக்குன்றிலே. 7

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : கழுக்குன்றம்
நாடு : தொண்டைநாடு

சிறப்பு: குரு தரிசனம்; ஏழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

Leave a Comment