தையலோர் கூறுடையான் பாடல் வரிகள் (taiyalor kurutaiyan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கைச்சின்னம் – கச்சனம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : கைச்சின்னம் – கச்சனம்
சுவாமி : கைச்சினநாதர்
அம்பாள் : வெள்வளை நாயகி

தையலோர் கூறுடையான்

தையலோர் கூறுடையான்
தண்மதிசேர் செஞ்சடையான்
மையுலா மணிமிடற்றன்
மறைவிளங்கு பாடலான்
நெய்யுலா மூவிலைவே
லேந்தி நிவந்தொளிசேர்
கையுடையான் மேவியுறை
கோயில் கைச்சினமே. 1

விடமல்கு கண்டத்தான்
வெள்வளையோர் கூறுடையான்
படமல்கு பாம்பரையான்
பற்றாதார் புரமெரித்தான்
நடமல்கும் ஆடலினான்
நான்மறையோர் பாடலினான்
கடமல்கு மாவுரியான்
உறைகோயில் கைச்சினமே. 2

பாடலார் நான்மறையான்
பைங்கொன்றை பாம்பினொடும்
சூடலான் வெண்மதியந்
துன்று கரந்தையொடும்
ஆடலான் அங்கை
அனலேந்தி ஆடரவக்
காடலான் மேவியுறை
கோயில் கைச்சினமே. 3

பண்டமரர் கூடிக்
கடைந்த படுகடல்நஞ்
சுண்டபிரான் என்றிறைஞ்சி
உம்பர் தொழுதேத்த
விண்டவர்கள் தொல்நகரம்
மூன்றுடனே வெந்தவியக்
கண்ட பிரான் மேவியுறை
கோயில் கைச்சினமே. 4

தேய்ந்துமலி வெண்பிறையான்
செய்யதிரு மேனியினான்
வாய்ந்திலங்கு வெண்ணீற்றான்
மாதினையோர் கூறுடையான்
சாய்ந்தமரர் வேண்டத்
தடங்கடல்நஞ் சுண்டநங்கைக்
காய்ந்தபிரான் மேவியுறை
கோயில் கைச்சினமே. 5

மங்கையோர் கூறுடையான்
மன்னு மறைபயின்றான்
அங்கையோர் வெண்டலையான்
ஆடரவம் பூண்டுகந்தான்
திங்களொடு பாம்பணிந்த
சீரார் திருமுடிமேல்
கங்கையினான் மேவியுறை
கோயில் கைச்சினமே. 6

வரியரவே நாணாக
மால்வரையே வில்லாக
எரிகணையால் முப்புரங்கள்
எய்துகந்த எம்பெருமான்
பொரிசுடலை யீமப்
புறங்காட்டான் போர்த்ததோர்
கரியுரியான் மேவியுறை
கோயில் கைச்சினமே. 7

போதுலவு கொன்றை
புனைந்தான் திருமுடிமேல்
மாதுமையா ளஞ்ச
மலையெடுத்த வாளரக்கன்
நீதியினா லேத்த
நிகழ்வித்து நின்றாடும்
காதலினான் மேவியுறை
கோயில் கைச்சினமே. 8

மண்ணினைமுன் சென்றிரந்த
மாலும் மலரயனும்
எண்ணறியா வண்ணம்
எரியுருவ மாயபிரான்
பண்ணிசையா லேத்தப்
படுவான்றன் நெற்றியின்மேல்
கண்ணுடையான் மேவியுறை
கோயில் கைச்சினமே. 9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 10

தண்வயல்சூழ் காழித்
தமிழ்ஞான சம்பந்தன்
கண்ணுதலான் மேவியுறை
கோயில் கைச்சினத்தைப்
பண்ணிசையா லேத்திப்
பயின்ற இவைவல்லார்
விண்ணவரா யோங்கி
வியனுலகம் ஆள்வாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment