பூரி யாவரும் புண்ணியம் பாடல் வரிகள் (puri yavarum punniyam) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருச்சேறை – உடையார்கோவில் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருச்சேறை – உடையார்கோவில்
சுவாமி : செந்நெறியப்பர்
அம்பாள் : ஞானவல்லியம்மை

பூரி யாவரும் புண்ணியம்

பூரி யாவரும்
புண்ணியம் பொய்கெடுங்
கூரி தாய
அறிவுகை கூடிடுஞ்
சீரி யார்பயில்
சேறையுட் செந்நெறி
நாரி பாகன்றன்
நாமம் நவிலவே. 1

என்ன மாதவஞ்
செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை
வேதவி ழுப்பொருள்
செந்நெ லார்வயல்
சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம்
பால்வந்து வைகவே. 2

பிறப்பு மூப்புப்
பெரும்பசி வான்பிணி
இறப்பு நீங்கியிங்
கின்பம்வந் தெய்திடுஞ்
சிறப்பர் சேறையுட்
செந்நெறி யான்கழல்
மறப்ப தின்றி
மனத்தினுள் வைக்கவே. 3

மாடு தேடி
மயக்கினில் வீழ்ந்துநீர்
ஓடி யெய்த்தும்
பயனிலை ஊமர்காள்
சேடர் வாழ்சேறைச்
செந்நெறி மேவிய
ஆட லான்றன்
அடியடைந் துய்ம்மினே. 4

எண்ணி நாளும்
எரியயிற் கூற்றுவன்
துண்ணென் றோன்றிற்
றுரக்கும் வழிகண்டேன்
திண்ணன் சேறைத்
திருச்செந் நெறியுறை
அண்ண லாருளர்
அஞ்சுவ தென்னுக்கே. 5

தப்பில் வானந்
தரணிகம் பிக்கிலென்
ஒப்பில் வேந்தர்
ஒருங்குடன் சீறிலென்
செப்ப மாஞ்சேறைச்
செந்நெறி மேவிய
அப்ப னாருளர்
அஞ்சுவ தென்னுக்கே. 6

வைத்த மாடும்
மடந்தைநல் லார்களும்
ஒத்தொவ் வாதவுற்
றார்களு மென்செய்வார்
சித்தர் சேறைத்
திருச்செந் நெறியுறை
அத்தர் தாமுளர்
அஞ்சுவ தென்னுக்கே. 7

குலங்க ளென்செய்வ
குற்றங்க ளென்செய்வ
துலங்கி நீநின்று
சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையிற்
செந்நெறி மேவிய
அலங்க னாருளர்
அஞ்சுவ தென்னுக்கே. 8

பழகி னால்வரும்
பண்டுள சுற்றமும்
விழவி டாவிடில்
வேண்டிய எய்தொணா
திகழ்கொள் சேறையிற்
செந்நெறி மேவிய
அழக னாருளர்
அஞ்சுவ தென்னுக்கே. 9

பொருந்து நீண்மலை
யைப்பிடித் தேந்தினான்
வருந்த வூன்றி
மலரடி வாங்கினான்
திருந்து சேறையிற்
செந்நெறி மேவியங்
கிருந்த சோதியென்
பார்க்கிட ரில்லையே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment