பொன்னாம் இதழி விரைமத்தம் பாடல் வரிகள் (ponnam itali viraimattam) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் நாகைக்காரோணம் – நாகப்பட்டினம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : நாகைக்காரோணம் – நாகப்பட்டினம்பொன்னாம் இதழி விரைமத்தம்

பொன்னாம் இதழி விரைமத்தம்
பொங்குகங்கைப் புரிசடைமேல்
முன்னா அரவம் மதியமும் சென்னி
வைத்தல் மூர்க்கு அன்னே
துன்னா மயூரம் சோலைதொறும் ஆட
தூரத் துணைவண்டு
தென்னா என்னும் தென்நாகைத்
திருக்காரோணத்து இருப்பீரே. 1

வரைக்கை வேழம் உரித்தும் அரன்நடமாட்டு
ஆனால் மனைதோறும்
இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை
விற்று நெல் கொள்வீர்
முரைக் கை பவளக்கால் காட்ட மூரி
சங்கத்தொடு முத்தம்
திரைக்கை காட்டும் தென்நாகைத் திருக்
காரோணத்து இருப்பீரே. 2

புல்லும் பெறுமே விடை புனரச் சடைமேல்
ஒரு பெண் புக வைத்தீர்
இல்லம் தோறும் பலி என்றால் இரக்க
இடுவார் இடுவாரே
முல்லை முறுவல் கொடி எடுப்ப கொன்றைமுகம்
மோதிரம் காட்ட
செல்லும் புறவின் தென்நாகைத் திருக்
காரோணத்து இருப்பீரே. 3

மாண்டார் எலும்பும் கலும்பும் எலாம் மாலை
ஆக மகிழ்ந்து அருளி
பூண்தார் பொறி ஆடு அரவு ஆமை
புரம்மூன்று எரித்தீர் பொருள்ஆக
தூண்டா விளக்கு மணிமாட
வீதிதோறும் சுடர்உய்க்க
சேண்தார் புரிசைத் தென்நாகைத்
திருக் காரோணத்து இருப்பீரே. 4

ஒருவர்க்கு ஒருவர்அரிது ஆகில் உடை
வெண்தலை கொண்டு ஊர்ஊரன்
இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால்
எளிதே சொல்லீர் எத்தனையும்
பருவன் கனகம் கற்பூரம்
பகர்ந்த முகந்து பப்பரவர்
தெருவில் சிந்தும் தென்நாகைத்
திருக் காரோணத்து இருப்பீரே. 5

தோடை உடுத்த காது உடையீர்
தோலை உடுத்துச் சோம்பாதே
ஆடை உடுத்துக் கண்டக்கால் அழகிது
அன்றே அரிது அன்று
ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை
மறிப்ப புறம்கை அனம்
சேடை உடுத்தும் தென்நாகைத்
திருக் காரோணத்து இருப்பீரே. 6

கடு நஞ்சு உண்டு இரக்கவே கண்டம்
கறுத்தது இக் காலம்
விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில்
ஆட்டை வேண்டா நீர்
கொடு மஞ்சுகள் தோய் நெடுமாடம்
குலவு மணிமாளிகைக் குழாம்
இடு மிஞ்சு இதை சூழ் தென்நாகைத்
திருக் காரோணத்து இருப்பீரே. 7

பள்ளம் பாறும் நறும் புனலைச்
சூடி பெண் ஓர் பாகமா
வெள்ளை நீறே பூசுவீர்
மேயும் விடையும் பாயுமே
தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை
சுமந்து வங்கம் சுங்கம் இடத்
தொள்ளும் வேலைத் தென்நாகைத்
திருக் காரோணத்து இருப்பீரே. 8

மத்தம் கவரும் மலர்க்
கொன்றைமாலைமேல் மால் ஆனாளை
உய்த்து அங்கு அவரும் உரை செய்தால்
உமக்கே அன்றே பழி உரையீர்
முத்தம் கவரும் நகை இளையார்
மூரித் தானை முடி மன்னர்
சித்தம் கவரும் தென்நாகைத்
திருக் காரோணத்து இருப்பீரே. 9

மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு
அளித்தீர் களித்தார் மதில் மூன்றும்
இறையில் எரித்தீர் ஏழ் உலகும் உடையார்
இரந்து ஊண் இனிதேதான்
திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சித்
திருக் கோபுரத்து நெருக்க மலர்ச்
சிறை வண்டு அறையும் தென்நாகைத்
திருக் காரோணத்து இருப்பீரே. 10

தேரார் வீதித் தென்நாகைத்
திருக் காரோணத்து இறையானைச்
சீரார் மாடத் திருநாவலூர்க் கோன்
சிறந்த வன் தொண்டன்
ஆரா அன்போடு உரைசெய்த
அஞ்சோடு அஞ்சும் அறிவார்கள்
வாரார் முலையாள் உமை கணவன்
மதிக்க இருப்பார் வான் அகத்தே. 11

திருச்சிற்றம்பலம்

Leave a Comment