பாவ மும்பழி பாடல் வரிகள் (pava mumpali) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் பாவநாசம் தலம் பொதுப் பதிகங்கள் நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : பொதுப் பதிகங்கள்
தலம் : பாவநாசம்பாவ மும்பழி

பாவ மும்பழி
பற்றற வேண்டுவீர்
ஆவில் அஞ்சுகந்
தாடு மவன்கழல்
மேவ ராய்மிக
வும்மகிழ்ந் துள்குமின்
காவ லாளன்
கலந்தருள் செய்யுமே. 1

கங்கை யாடிலென்
காவிரி யாடிலென்
கொங்கு தண்கும
ரித்துறை யாடிலென்
ஒங்கு மாகட
லோதநீ ராடிலென்
எங்கு மீசனெ
னாதவர்க் கில்லையே. 2

பட்ட ராகிலென்
சாத்திரங் கேட்கிலென்
இட்டு மட்டியு
மீதொழில் பூணிலென்
எட்டு மொன்றும்
இரண்டு மறியிலென்
இட்ட மீசனெ
னாதவர்க் கில்லையே. 3

வேத மோதிலென்
வேள்விகள் செய்கிலென்
நீதி நூல்பல
நித்தல் பயிற்றிலென்
ஓதி யங்கமோ
ராறும் உணரிலென்
ஈச னையுள்கு
வார்க்கன்றி இல்லையே. 4

காலை சென்று
கலந்துநீர் மூழ்கிலென்
வேலை தோறும்
விதிவழி நிற்கிலென்
ஆலை வேள்வி
யடைந்தது வேட்கிலென்
ஏல ஈசனென்
பார்க்கன்றி இல்லையே. 5

கான நாடு
கலந்து திரியிலென்
ஈன மின்றி
இருந்தவஞ் செய்யிலென்
ஊனை யுண்டல்
ஒழிந்துவா னோக்கிலென்
ஞான னென்பவர்க்
கன்றிநன் கில்லையே. 6

கூட வேடத்த
ராகிக் குழுவிலென்
வாடி யூனை
வருத்தித் திரியிலென்
ஆடல் வேடத்தன்
அம்பலக் கூத்தனைப்
பாட லாளர்க்கல்
லாற்பயன் இல்லையே. 7

நன்று நோற்கிலென்
பட்டினி யாகிலென்
குன்ற மேறி
யிருந்தவஞ் செய்யிலென்
சென்று நீரிற்
குளித்துத் திரியிலென்
என்று மீசனென்
பார்க்கன்றி இல்லையே. 8

கோடித் தீர்த்தங்
கலந்து குளித்தவை
ஆடி னாலும்
அரனுக்கன் பில்லையேல்
ஓடும் நீரினை
ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட
மூர்க்கனோ டொக்குமே. 9

மற்று நற்றவஞ்
செய்து வருந்திலென்
பொற்றை யுற்றெடுத்
தானுடல் புக்கிறக்
குற்ற நற்குரை
யார்கழற் சேவடி
பற்றி லாதவர்க்
குப்பயன் இல்லையே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment