பாணத் தால்மதில் பாடல் வரிகள் (panat talmatil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் நாகைக்காரோணம் – நாகப்பட்டினம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : நாகைக்காரோணம் – நாகப்பட்டினம்
சுவாமி : காயாரோகணேஸ்வரர்
அம்பாள் : நீலாயதாக்ஷி

பாணத் தால்மதில்

பாணத் தால்மதில்
மூன்று மெரித்தவன்
பூணத் தானர
வாமை பொறுத்தவன்
காணத் தானினி
யான்கடல் நாகைக்கா
ரோணத் தானென
நம்வினை ஓயுமே. 1

வண்ட லம்பிய
வார்சடை ஈசனை
விண்ட லம்பணிந்
தேத்தும் விகிர்தனைக்
கண்ட லங்கமழ்
நாகைக்கா ரோணனைக்
கண்ட லும்வினை
யான கழலுமே. 2

புனையும் மாமலர்
கொண்டு புரிசடை
நனையும் மாமலர்
சூடிய நம்பனைக்
கனையும் வார்கடல்
நாகைக்கா ரோணனை
நினைய வேவினை
யாயின நீங்குமே. 3

கொல்லை மால்விடை
யேறிய கோவினை
எல்லி மாநட
மாடும் இறைவனைக்
கல்லி னார்மதில்
நாகைக்கா ரோணனைச்
சொல்ல வேவினை
யானவை சோருமே. 4

மெய்ய னைவிடை
யூர்தியை வெண்மழுக்
கைய னைக்கடல்
நாகைக்கா ரோணனை
மைய னுக்கிய
கண்டனை வானவர்
ஐய னைத்தொழு
வார்க்கல்ல லில்லையே. 5

அலங்கல் சேர்சடை
ஆதி புராணனை
விலங்கல் மெல்லியல்
பாகம் விருப்பனைக்
கலங்கள் சேர்கடல்
நாகைக்கா ரோணனை
வலங்கொள் வார்வினை
யாயின மாயுமே. 6

சினங்கொள் மால்கரி
சீறிய ஏறினை
இனங்கொள் வானவ
ரேத்திய ஈசனைக்
கனங்கொள் மாமதில்
நாகைக்கா ரோணனை
மனங்கொள் வார்வினை
யாயின மாயுமே. 7

அந்த மில்புகழ்
ஆயிழை யார்பணிந்
தெந்தை யீசனென்
றேத்தும் இறைவனைக்
கந்த வார்பொழில்
நாகைக்கா ரோணனைச்
சிந்தை செய்யக்
கெடுந்துயர் திண்ணமே. 8

கருவ னைக்கடல்
நாகைக்கா ரோணனை
இருவ ருக்கறி
வொண்ணா இறைவனை
ஒருவ னையுண
ரார்புர மூன்றெய்த
செருவ னைத்தொழத்
தீவினை தீருமே. 9

கடல்க ழிதழி
நாகைக்கா ரோணன்றன்
வடவ ரையெடுத்
தார்த்த அரக்கனை
அடர வூன்றிய
பாதம் அணைதரத்
தொடர அஞ்சுந்
துயக்கறுங் காலனே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment