நீரும் மலரும் நிலவுஞ் பாடல் வரிகள் (nirum malarum nilavun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் நறையூர்ச்சித்தீச்சுரம் – திருநறையூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : நறையூர்ச்சித்தீச்சுரம் – திருநறையூர்நீரும் மலரும் நிலவுஞ்

நீரும் மலரும்
நிலவுஞ் சடைமேல்
ஊரும் அரவம்
உடையான் இடமாம்
வாரும் அருவி
மணிபொன் கொழித்துச்
சேரும் நறையூர்ச்
சித்தீச் சரமே. 1

அளைப்பை அரவேர்
இடையாள் அஞ்சத்
துளைக்கைக் கரித்தோல்
உரித்தான் இடமாம்
வளைக்கை மடவார்
மடுவிற் றடநீர்த்
திளைக்கும் நறையூர்ச்
சித்தீச் சரமே. 2

இகழுந் தகையோர்
எயில்மூன் றெரித்த
பகழி யொடுவில்
லுடையோன் பதிதான்
முகிழ்மென் முலையார்
முகமே கமலந்
திகழும் நறையூர்ச்
சித்தீச் சரமே. 3

மறக்கொள் அரக்கன்
வரைதோள் வரையால்
இறக்கொள் விரற்கோன்
இருக்கும் இடமாம்
நறக்கொள் கமலம்
நனிபள் ளியெழத்
திறக்கும் நறையூர்ச்
சித்தீச் சரமே. 4

முழுநீ றணிமே
னியன்மொய் குழலார்
எழுநீர் மைகொள்வான்
அமரும் இடமாம்
கழுநீர் கமழக்
கயல்சேல் உகளுஞ்
செழுநீர் நறையூர்ச்
சித்தீச் சரமே. 5

ஊனா ருடைவெண்
டலையுண் பலிகொண்
டானார் அடலே
றமர்வான் இடமாம்
வானார் மதியம்
பதிவண் பொழில்வாய்த்
தேனார் நறையூர்ச்
சித்தீச் சரமே. 6

காரூர் கடலில்
விடமுண் டருள்செய்
நீரூர் சடையன்
நிலவும் இடமாம்
வாரூர் முலையார்
மருவும் மறுகில்
தேரூர் நறையூர்ச்
சித்தீச் சரமே. 7

கரியின் உரியுங்
கலைமான் மறியும்
எரியும் மழுவும்
உடையான் இடமாம்
புரியும் மறையோர்
நிறைசொற் பொருள்கள்
தெரியும் நறையூர்ச்
சித்தீச் சரமே. 8

பேணா முனிவன்
பெருவேள் வியெலாம்
மாணா மைசெய்தான்
மருவும் இடமாம்
பாணார் குழலும்
முழவும் விழவிற்
சேணார் நறையூர்ச்
சித்தீச் சரமே. 9

குறியில் வழுவாக்
கொடுங்கூற் றுதைத்த
எறியும் மழுவாட்
படையான் இடமாம்
நெறியில் வழுவா
நியமத் தவர்கள்
செறியும் நறையூர்ச்
சித்தீச் சரமே. 10

போரார் புரமெய்
புனிதன் அமருஞ்
சீரார் நறையூர்ச்
சித்தீச் சரத்தை
ஆரூ ரன்சொல்
லிவைவல் லவர்கள்
ஏரார் இமையோர்
உலகெய் துவரே. 11

திருச்சிற்றம்பலம்

Leave a Comment