நீலநன் மாமிடற்றன் பாடல் வரிகள் (nilanan mamitarran) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கொச்சைவயம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்கொச்சைவயம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

நீலநன் மாமிடற்றன்

நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்தன்
நெடுமா வுரித்த நிகரில்
சேலன கண்ணிவண்ணம் ஒருகூ றுருக்கொள்
திகழ்தேவன் மேவு பதிதான்
வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை
விழவோசை வேத வொலியின்
சாலநல் வேலையோசை தருமாட வீதி
கொடியாடு கொச்சை வயமே. 1

விடையுடை யப்பனொப்பில் நடமாட வல்ல
விகிர்தத் துருக்கொள் விமலன்
சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள்
தகவைத்த சோதி பதிதான்
மடையிடை யன்னமெங்கு நிறையப் பரந்து
கமலத்து வைகும் வயல்சூழ்
கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும்
வளர்கின்ற கொச்சை வயமே. 2

படஅர வாடுமுன்கை யுடையா னிடும்பை
களைவிக்கும் எங்கள் பரமன்
இடமுடை வெண்டலைக்கை பலிகொள்ளும் இன்பன்
இடமாய வேர்கொள் பதிதான்
நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடு
நளிர்சோலை கோலு கனகக்
குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல
மறையோது கொச்சை வயமே. 3

எண்டிசை பாலரெங்கும் இகலிப் புகுந்து
முயல்வுற்ற சிந்தை முடுகிப்
பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு
பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டன்மிண்டி வருநீர பொன்னி
வயல்பாய வாளை குழுமிக்
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன
வளர்கின்ற கொச்சை வயமே. 4

பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர
னொடுதோழ மைக்கொள் பகவன்
இனியன அல்லவற்றை யினிதாக நல்கும்
இறைவன் இடங்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம்
வளர்தூம மோடி யணவிக்
குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து
நிறைகின்ற கொச்சை வயமே. 5

புலியதள் கோவணங்கள் உடையாடை யாக
வுடையான் நினைக்கு மளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன்
நலமா இருந்த நகர்தான்
கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை
யுடையார் நிறைந்து வளரப்
பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடு
வரைமேவு கொச்சை வயமே. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7

மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன்
முடியோடு தோள்கள் நெரியப்
பிழைகெட மாமலர்ப்பொன் அடிவைத்த பேயொ
டுடனாடி மேய பதிதான்
இழைவள ரல்குல்மாதர் இசைபாடி யாட
விடுமூச லன்ன கமுகின்
குழைதரு கண்ணிவிண்ணில் வருவார்கள் தங்கள்
அடிதேடு கொச்சை வயமே. 8

வண்டமர் பங்கயத்து வளர்வானும் வைய
முழுதுண்ட மாலும் இகலிக்
கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்தும்
அறியாத சோதி பதிதான்
நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து
விரைதேர போது மதுவிற்
புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து
வயல்மேவு கொச்சை வயமே. 9

கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்டர்
இடுசீ வரத்தி னுடையார்
மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல
விகிர்தத் துருக்கொள் விமலன்
பையுடை நாகவாயில் எயிறார மிக்க
குரவம் பயின்று மலரச்
செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து
மணநாறு கொச்சை வயமே. 10

இறைவனை ஒப்பிலாத ஒளிமேனி யானை
உலகங்க ளேழு முடனே
மறைதரு வெள்ளமேவி வளர்கோயில் மன்னி
இனிதா இருந்த மணியைக்
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த
தமிழ்மாலை பாடு மவர்போய்
அறைகழ லீசனாளும் நகர்மேவி யென்றும்
அழகா இருப்ப தறிவே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment