முற்றுணை யாயி பாடல் வரிகள் (murrunai yayi) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநனிபள்ளி – புஞ்சை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநனிபள்ளி – புஞ்சை
சுவாமி : நற்றுணையப்பர்
அம்பாள் : பர்வதராசபுத்திரி

முற்றுணை யாயி

முற்றுணை யாயி னானை
மூவர்க்கு முதல்வன் றன்னைச்
சொற்றுணை ஆயி னானைச்
சோதியை ஆத ரித்து
உற்றுணர்ந் துருகி யூறி
உள்கசி வுடைய வர்க்கு
நற்றுணை யாவர் போலும்
நனிபள்ளி அடிக ளாரே. 1

புலர்ந்தகால் பூவும் நீருங்
கொண்டடி போற்ற மாட்டா
வலஞ்செய்து வாயின் நூலால்
வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை அரைய னாக்கிச்
சீர்மைகள் அருள வல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த
நனிபள்ளி அடிக ளாரே. 2

எண்பதும் பத்தும் ஆறு
மென்னுளே இருந்து மன்னிக்
கண்பழக் கொன்று மின்றிக்
கலக்கநான் அலக்க ழிந்தேன்
செண்பகந் திகழும் புன்னை
செழுந்திரட் குரவம் வேங்கை
நண்புசெய் சோலை சூழ்ந்த
நனிபள்ளி அடிக ளாரே. 3

பண்ணினார் பாட லாகிப்
பழத்தினில் இரத மாகிக்
கண்ணினார் பார்வை யாகிக்
கருத்தொடு கற்ப மாகி
எண்ணினார் எண்ண மாகி
ஏழுல கனைத்து மாகி
நண்ணினார் வினைகள் தீர்ப்பார்
நனிபள்ளி அடிக ளாரே. 4

துஞ்சிருள் காலை மாலை
தொடர்ச்சியை மறந் திராதே
அஞ்செழுத் தோதின் நாளும்
அரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பால்சோ றாக்கி
வழக்கிலா அமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார்
நனிபள்ளி அடிக ளாரே. 5

செம்மலர்க் கமலத் தோனுந்
திருமுடி காண மாட்டான்
அம்மலர்ப் பாதங் காண்பான்
ஆழியான் அகழ்ந்துங் காணான்
நின்மலன் என்றங் கேத்தும்
நினைப்பினை அருளி நாளும்
நம்மலம் அறுப்பர் போலும்
நனிபள்ளி அடிக ளாரே. 6

அரவத்தால் வரையைச் சுற்றி
அமரரோ டசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்றும்
ஆலநஞ் சமுதா வுண்டார்
விரவித்தம் அடிய ராகி
வீடிலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ வொட்டார்
நனிபள்ளி அடிக ளாரே. 7

மண்ணுளே திரியும் போது
வருவன பலவுங் குற்றம்
புண்ணுளே புரைபு ரையன்
புழுப்பொதி பொள்ள லாக்கை
—– —– —– —–

இப்பதிகத்தில் 8-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் போயின. 8

இப்பதிகத்தில் 9-ம்செய்யுள் மறைந்து போயிற்று. 9

பத்துமோர் இரட்டி தோளான்
பாரித்து மலையெ டுக்கப்
பத்துமோர் இரட்டி தோள்கள்
படருடம் படர வூன்றிப்
பத்துவாய் கீதம் பாடப்
பரிந்தவற் கருள்கொ டுத்தார்
பத்தர்தாம் பரவி யேத்தும்
நனிபள்ளிப் பரம னாரே.

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment