மெய்யெலாம் வெண்ணீறு பாடல் வரிகள் (meyyelam venniru) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்
சுவாமி : புற்றிடங்கொண்டார்
அம்பாள் : அல்லியம்பூங்கோதை

மெய்யெலாம் வெண்ணீறு

மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி
யுழிதந்தென் உள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ
மயிலாலும் ஆரூ ரரைக்
கையினாற் றொழா தொழிந்து
கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே. 1

என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்
டென்னையோர் உருவ மாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்
டென்னுள்ளங் கோயி லாக்கி
அன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண்
டருள்செய்த ஆரூ ரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்
காக்கைப்பின் போன வாறே. 2

பெருகுவித்தென் பாவத்தைப் பண்டெலாங்
குண்டர்கள்தஞ் சொல்லே கேட்டு
உருகுவித்தென் உள்ளத்தின் உள்ளிருந்த
கள்ளத்தைத் தள்ளிப் போக்கி
அருகுவித்துப் பிணிகாட்டி ஆட்கொண்டு
பிணிதீர்த்த ஆரூ ரர்தம்
அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க
மறம்விலைக்குக் கொண்ட வாறே. 3

குண்டானாய்த் தலைபறித்துக் குவிமுலையார்
நகைநாணா துழிதர் வேனைப்
பண்டமாப் படுத்தென்னைப் பால்தலையிற்
றெளித்துத்தன் பாதங் காட்டித்
தொண்டெலா மிசைபாடத் தூமுறுவல்
அருள்செய்யும் ஆரூ ரரைப்
பண்டெலாம் அறியாதே பனிநீராற்
பரவைசெயப் பாவித் தேனே. 4

துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர்
சொற்கேட்டுத் துவர்வாய்க் கொண்டு
என்னாகத் திரிதந்தீங் கிருகையேற்
றிடவுண்ட ஏழை யேன்நான்
பொன்னாகத் தடியேனைப் புகப்பெய்து
பொருட்படுத்த ஆரூ ரரை
என்னாகத் திருத்தாதே ஏதன்போர்க்
காதனாய் அகப்பட் டேனே. 5

பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு
தலையோடே திரிதர் வேனை
ஒப்போட வோதுவித்தென் உள்ளத்தின்
உள்ளிருந்தங் குறுதி காட்டி
அப்போதைக் கப்போதும் அடியவர்கட்
காரமுதாம் ஆரூ ரரை
எப்போது நினையாதே இருட்டறையின்
மலடுகறந் தெய்த்த வாறே. 6

கதியொன்றும் அறியாதே கண்ணழலத்
தலைபறித்துக் கையில் உண்டு
பதியொன்று நெடுவீதிப் பலர்காண
நகைநாணா துழிதர் வேற்கு
மதிதந்த ஆருரில் வார்தேனை
வாய்மடுத்துப் பருகி உய்யும்
விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க
மின்மினித்தீக் காய்ந்த வாறே. 7

பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்ற
சமண்நீசர் சொல்லே கேட்டுக்
காவிசேர் கண்மடவார்க் கண்டோ டிக்
கதவடைக்குங் கள்வ னேன்றன்
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை
யாட்கொண்ட ஆரூ ரரைப்
பாவியேன் அறியாதே பாழூரிற்
பயிக்கம்புக் கெய்த்த வாறே. 8

ஒட்டாத வாளவுணர் புரம்மூன்றும்
ஓரம்பின் வாயின் வீழக்
கட்டானைக் காமனையுங் காலனையுங்
கண்ணினொடு காலின் வீழ
அட்டானை ஆரூரில் அம்மானை
ஆர்வச்செற் றக்கு ரோதந்
தட்டானைச் சாராதே தவமிருக்க
அவஞ்செய்து தருக்கி னேனே. 9

மறுத்தானொர் வல்லரக்கன் ஈரைந்து
முடியினொடு தோளுந் தாளும்
இறுத்தானை எழில்முளரித் தவிசின்மிசை
இருத்தான்றன் தலையி லொன்றை
அறுத்தானை ஆரூரில் அம்மானை
ஆலாலம் உண்டு கண்டங்
கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க
இரும்புகடித் தெய்த்த வாறே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment