மருந்துவேண் டில்லிவை பாடல் வரிகள் (maruntuven tillivai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருந்துதேவன்குடி – திருத்தேவங்குடி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருந்துதேவன்குடி – திருத்தேவங்குடி
சுவாமி : கர்க்கடகேசுவரர்
அம்பாள் : அருமருந்துநாயகியம்மை

மருந்துவேண் டில்லிவை

மருந்துவேண் டில்லிவை
மந்திரங் கள்ளிவை
புரிந்துகேட் கப்படும்
புண்ணியங் கள்ளிவை
திருந்துதே வன்குடித்
தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும்
அடிகள்வே டங்களே. 1

வீதிபோக் காவன
வினையைவீட் டுவ்வன
ஓதியோர்க் கப்படாப்
பொருளையோர் விப்பன
தீதில்தே வன்குடித்
தேவர்தே வெய்திய
ஆதியந் தம்மிலா
அடிகள்வே டங்களே. 2

மானமாக் குவ்வன
மாசுநீக் குவ்வன
வானையுள் கச்செலும்
வழிகள்காட் டுவ்வன
தேனும்வண் டும்மிசை
பாடுந்தே வன்குடி
ஆனஞ்சா டும்முடி
யடிகள்வே டங்களே. 3

செவிகளார் விப்பன
சிந்தையுட் சேர்வன
கவிகள்பா டுவ்வன
கண்குளிர் விப்பன
புவிகள்பொங் கப்புனல்
பாயுந்தே வன்குடி
அவிகளுய்க் கப்படும்
அடிகள்வே டங்களே. 4

விண்ணுலா வுந்நெறி
வீடுகாட் டுந்நெறி
மண்ணுலா வுந்நெறி
மயக்கந்தீர்க் குந்நெறி
தெண்ணிலா வெண்மதி
தீண்டுதே வன்குடி
அண்ணலான் ஏறுடை
யடிகள்வே டங்களே. 5

பங்கமென் னப்படர்
பழிகளென் னப்படா
புங்கமென் னப்படர்
புகழ்களென் னப்படுந்
திங்கள்தோ யும்பொழில்
தீண்டுதே வன்குடி
அங்கமா றுஞ்சொன்ன
அடிகள்வே டங்களே. 6

கரைதலொன் றும்மிலை
கருதவல் லார்தமக்
குரையிலூ னம்மிலை
உலகினின் மன்னுவர்
திரைகள்பொங் கப்புனல்
பாயுந்தே வன்குடி
அரையில்வெண் கோவணத்
தடிகள்வே டங்களே. 7

உலகமுட் குந்திறல்
லுடையரக் கன்வலி
விலகுபூ தக்கணம்
வெருட்டும்வே டத்தின
திலகமா ரும்பொழில்
சூழ்ந்ததே வன்குடி
அலர்தயங் கும்முடி
யடிகள்வே டங்களே. 8

துளக்கமில் லாதன
தூயதோற் றத்தன
விளக்கமாக் குவ்வன
வெறிவண்டா ரும்பொழில்
திளைக்குந்தே வன்குடித்
திசைமுக னோடுமால்
அளக்கவொண் ணாவண்ணத்
தடிகள்வே டங்களே. 9

செருமரு தண்துவர்த்
தேரமண் ஆதர்கள்
உருமரு வப்படாத்
தொழும்பர்தம் உரைகொளேல்
திருமரு வும்பொய்கை
சூழ்ந்ததே வன்குடி
அருமருந் தாவன
அடிகள்வே டங்களே. 10

சேடர்தே வன்குடித்
தேவர்தே வன்றனை
மாடமோங் கும்பொழில்
மல்குதண் காழியான்
நாடவல் லதமிழ்
ஞானசம் பந்தன
பாடல்பத் தும்வல்லார்க்
கில்லையாம் பாவமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment