குழல்வலங் கொண்ட பாடல் வரிகள் (kulalvalan konta) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்
சுவாமி : புற்றிடங்கொண்டார்
அம்பாள் : அல்லியம்பூங்கோதை

குழல்வலங் கொண்ட

குழல்வலங் கொண்ட சொல்லாள்
கோலவேற் கண்ணி தன்னைக்
கழல்வலங் கொண்டு நீங்காக்
கணங்களக் கணங்க ளார
அழல்வலங் கொண்ட கையான்
அருட்கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல்வலங் கொண்டல் செய்வான்
தோன்றினார் தோன்றி னாரே. 1

நாகத்தை நங்கை அஞ்ச
நங்கையை மஞ்ஞை யென்று
வேகத்தைத் தவிர நாகம்
வேழத்தின் உரிவை போர்த்துப்
பாகத்தின் நிமிர்தல் செய்யாத்
திங்களை மின்னென் றஞ்சி
ஆகத்திற் கிடந்த நாகம்
அடங்கும்ஆ ரூர னார்க்கே. 2

தொழுதகங் குழைய மேவித்
தொட்டிமை யுடைய தொண்டர்
அழுதகம் புகுந்து நின்றார்
அவரவர் போலும் ஆரூர்
எழிலக நடுவெண் முத்த
மன்றியும் ஏர்கொள் வேலிப்
பொழிலகம் விளங்கு திங்கட்
புதுமுகிழ் சூடி னாரே. 3

நஞ்சிருள் மணிகொள் கண்டர்
நகையிருள் ஈமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத் தாடி
விளங்கினார் போலும் மூவா
வெஞ்சுடர் முகடு தீண்டி
வெள்ளிநா ராச மன்ன
அஞ்சுடர் அணிவெண் டிங்கள்
அணியும்ஆ ரூர னாரே. 4

எந்தளிர் நீர்மை கோல
மேனியென் றிமையோ ரேத்தப்
பைந்தளிர்க் கொம்ப ரன்ன
படர்கொடி பயிலப் பட்டுத்
தஞ்சடைத் தொத்தி னாலுந்
தம்மதோர் நீர்மை யாலும்
அந்தளிர் ஆகம் போலும்
வடிவர்ஆ ரூர னாரே. 5

வானகம் விளங்க மல்கும்
வளங்கெழு மதியஞ் சூடித்
தானக மழிய வந்து
தாம்பலி தேர்வர் போலும்
ஊனகங் கழிந்த ஓட்டில்
உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
ஆனகம் அஞ்சும் ஆடும்
அடிகள்ஆ ரூர னாரே. 6

அஞ்சணை கணையி னானை
அழலுற அன்று நோக்கி
அஞ்சணை குழலி னாளை
அமுதமா அணைந்து நக்கு
அஞ்சணை அஞ்சும் ஆடி
ஆடர வாட்டு வார்தாம்
அஞ்சணை வேலி ஆரூர்
ஆதரித் திடங்கொண் டாரே. 7

வணங்கிமுன் அமரர் ஏத்த
வல்வினை யான தீரப்
பிணங்குடைச் சடையில் வைத்த
பிறையுடைப் பெருமை யண்ணல்
மணங்கம ழோதி பாகர்
மதிநிலா வட்டத் தாடி
அணங்கொடி மாட வீதி
ஆரூரெம் அடிக ளாரே. 8

நகலிடம் பிறர்கட் காக
நான்மறை யோர்கள் தங்கள்
புகலிட மாகி வாழும்
புகலிலி இருவர் கூடி
இகலிட மாக நீண்டங்
கீண்டெழில் அழல தாகி
அகலிடம் பரவி யேத்த
அடிகள்ஆ ரூர னாரே. 9

ஆயிரந் திங்கள் மொய்த்த
அலைகடல் அமுதம் வாங்கி
ஆயிரம் அசுரர் வாழும்
அணிமதில் மூன்றும் வேவ
ஆயிரந் தோளும் மட்டித்
தாடிய அசைவு தீர
ஆயிரம் அடியும் வைத்த
அடிகள்ஆ ரூர னாரே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment