கொல்லத் தான்நம பாடல் வரிகள் (kollat tannama) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநல்லம் – கோனேரிராஜபுரம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநல்லம் – கோனேரிராஜபுரம்
சுவாமி : உமாமகேசுவரர்
அம்பாள் : மங்களநாயகி

கொல்லத் தான்நம

கொல்லத் தான்நம
னார்தமர் வந்தக்கால்
இல்லத் தார்செய்ய
லாவதென் ஏழைகாள்
நல்லத் தான்நமை
யாளுடை யான்கழல்
சொல்லத் தான்வல்லி
ரேற்றுயர் தீருமே. 1

பொக்கம் பேசிப்
பொழுது கழியாதே
துக்கந் தீர்வகை
சொல்லுவன் கேண்மினோ
தக்கன் வேள்வி
தகர்த்த தழல்வண்ணன்
நக்கன் சேர்நல்லம்
நண்ணுதல் நன்மையே. 2

பிணிகொள் வார்குழற்
பேதையர் காதலாற்
பணிகள் மேவிப்
பயனில்லை பாவிகாள்
அணுக வேண்டில்
அரனெறி யாவது
நணுகு நாதன்
நகர்திரு நல்லமே. 3

தமக்கு நல்லது
தம்முயிர் போயினால்
இமைக்கும் போதும்
இராதிக் குரம்பைதான்
உமைக்கு நல்லவன்
றானுறை யும்பதி
நமக்கு நல்லது
நல்ல மடைவதே. 4

உரைத ளர்ந்துட
லார்நடுங் காமுனம்
நரைவி டையுடை
யானிடம் நல்லமே
பரவு மின்பணி
மின்பணி வாரொடே
விரவு மின்விர
வாரை விடுமினே. 5

அல்ல லாகஐம்
பூதங்க ளாட்டினும்
வல்ல வாறு
சிவாய நமவென்று
நல்லம் மேவிய
நாத னடிதொழ
வெல்ல வந்த
வினைப்பகை வீடுமே. 6

மாத ராரொடு
மக்களுஞ் சுற்றமும்
பேத மாகிப்
பிரிவதன் முன்னமே
நாதன் மேவிய
நல்லம் நகர்தொழப்
போது மின்னெழு
மின்புக லாகுமே. 7

வெம்மை யான
வினைக்கடல் நீங்கிநீர்
செம்மை யாய
சிவகதி சேரலாஞ்
சும்மை யார்மலர்
தூவித் தொழுமினோ
நம்மை யாளுடை
யானிடம் நல்லமே. 8

கால மான
கழிவதன் முன்னமே
ஏலு மாறு
வணங்கிநின் றேத்துமின்
மாலும் மாமல
ரானொடு மாமறை
நாலும் வல்லவர்
கோனிடம் நல்லமே. 9

மல்லை மல்கிய
தோளரக் கன்வலி
ஒல்லை யில்லொழித்
தானுறை யும்பதி
நல்ல நல்லம்
எனும்பெயர் நாவினாற்
சொல்ல வல்லவர்
தூநெறி சேர்வரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment