கரவாடும் வன்னெஞ்சர்க் பாடல் வரிகள் (karavatum vannencark) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கச்சிஏகம்பம் – காஞ்சிபுரம் தலம் தொண்டைநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : தொண்டைநாடு
தலம் : திருக்கச்சிஏகம்பம் – காஞ்சிபுரம்
சுவாமி : ஏகாம்பரநாதர்
அம்பாள் : காமாட்சியம்மை

கரவாடும் வன்னெஞ்சர்க்

கரவாடும் வன்னெஞ்சர்க்
கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை
விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ
அங்கையினில் அனலேந்தி
இரவாடும் பெருமானை
என்மனத்தே வைத்தேனே. 1

தேனோக்குங் கிளிமழலை
உமைகேள்வன் செழும்பவளந்
தானோக்குந் திருமேனி
தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர்
சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை
என்மனத்தே வைத்தேனே. 2

கைப்போது மலர்தூவிக்
காதலித்து வானோர்கள்
முப்போதும் முடிசாய்த்துத்
தொழநின்ற முதல்வனை
அப்போது மலர்தூவி
ஐம்புலனும் அகத்தடக்கி
எப்போதும் இனியானை
என்மனத்தே வைத்தேனே. 3

அண்டமாய் ஆதியாய்
அருமறையோ டைம்பூதப்
பிண்டமாய் உலகுக்கோர்
பெய்பொருளாம் பிஞ்ஞகனைத்
தொண்டர்தாம் மலர்தூவிச்
சொன்மாலை புனைகின்ற
இண்டைசேர் சடையானை
என்மனத்தே வைத்தேனே. 4

ஆறேறு சடையானை
ஆயிரம்பே ரம்மானைப்
பாறேறு படுதலையிற்
பலிகொள்ளும் பரம்பரனை
நீறேறு திருமேனி
நின்மலனை நெடுந்தூவி
ஏறேறும் பெருமானை
என்மனத்தே வைத்தேனே. 5

தேசனைத் தேசங்கள்
தொழநின்ற திருமாலாற்
பூசனைப் பூசனைகள்
உகப்பானைப் பூவின்கண்
வாசனை மலைநிலநீர்
தீவளிஆ காசமாம்
ஈசனை எம்மானை
என்மனத்தே வைத்தேனே. 6

நல்லானை நல்லான
நான்மறையோ டாறங்கம்
வல்லானை வல்லார்கள்
மனத்துறையும் மைந்தனைச்
சொல்லானைச் சொல்லார்ந்த
பொருளானைத் துகளேதும்
இல்லானை எம்மானை
என்மனத்தே வைத்தேனே. 7

விரித்தானை நால்வர்க்கு
வெவ்வேறு வேதங்கள்
புரித்தானைப் பதஞ்சந்திப்
பொருளுருவாம் புண்ணியனைத்
தரித்தானைக் கங்கைநீர்
தாழ்சடைமேல் மதில்மூன்றும்
எரித்தானை எம்மானை
என்மனத்தே வைத்தேனே. 8

ஆகம்பத் தரவணையான்
அயன்அறிதற் கரியானைப்
பாகம்பெண் ணாண்பாக
மாய்நின்ற பசுபதியை
மாகம்ப மறையோதும்
இறையானை மதிற்கச்சி
ஏகம்ப மேயானை
என்மனத்தே வைத்தேனே. 9

அடுத்தானை உரித்தானை
அருச்சுனற்குப் பாசுபதங்
கொடுத்தானைக் குலவரையே
சிலையாகக் கூரம்பு
தொடுத்தானைப் புரமெரியச்
சுனைமல்கு கயிலாயம்
எடுத்தானைத் தடுத்தானை
என்மனத்தே வைத்தேனே.

இத்தலம் தொண்டை நாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment