இறைகளோ டிசைந்த பாடல் வரிகள் (iraikalo ticainta) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்இறைகளோ டிசைந்த

இறைகளோ டிசைந்த இன்பம்
இன்பத்தோ டிசைந்த வாழ்வு
பறைகிழித் தனைய போர்வை
பற்றியான் நோக்கி னேற்குத்
திறைகொணர்ந் தீண்டித் தேவர்
செம்பொனும் மணியுந் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே. 1

ஊன்மிசை உதிரக் குப்பை
ஒருபொரு ளிலாத மாயம்
மான்மறித் தனைய நோக்கின்
மடந்தைமார் மதிக்கு மிந்த
மானுடப் பிறவி வாழ்வு
வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
ஆனல்வெள் ளேற்ற ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே. 2

அறுபதும் பத்தும் எட்டும்
ஆறினோ டஞ்சு நான்குந்
துறுபறித் தனைய நோக்கிச்
சொல்லிற்றொன் றாகச் சொல்லார்
நறுமலர்ப் பூவும் நீரும்
நாடொறும் வணங்கு வார்க்கு
அறிவினைக் கொடுக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே. 3

சொல்லிடில் எல்லை இல்லை
சுவையிலாப் பேதை வாழ்வு
நல்லதோர் கூரை புக்கு
நலமிக அறிந்தே னல்லேன்
மல்லிகை மாடம் நீடு
மருங்கொடு நெருங்கி யெங்கும்
அல்லிவண் டியங்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே. 4

நரம்பினோ டெலும்பு கட்டி
நசையினோ டிசைவொன் றில்லாக்
குரம்பைவாய்க் குடியி ருந்து
குலத்தினால் வாழ மாட்டேன்
விரும்பிய கமழும் புன்னை
மாதவித் தொகுதி என்றும்
அரும்புவாய் மலரும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே. 5

மணமென மகிழ்வர் முன்னே
மக்கள்தாய் தந்தை சுற்றம்
பிணமெனச் சுடுவர் பேர்த்தே
பிறவியை வேண்டேன் நாயேன்
பணையிடைச் சோலை தோறும்
பைம்பொழில் விளாகத் தெங்கள்
அணைவினைக் கொடுக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே. 6

தாழ்வெனுந் தன்மை விட்டுத்
தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதித் தொண்டர்
மறுமைக்கொன் றீய கில்லார்
ஆழ்குழிப் பட்ட போது
அலக்கணில் ஒருவர்க் காவர்
யாழ்முயன் றிருக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே. 7

உதிரநீர் இறைச்சிக் குப்பை
எடுத்தது மலக்கு கைம்மேல்
வருவதோர் மாயக் கூரை
வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
கரியமால் அயனுந் தேடிக்
கழலிணை காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே. 8

பொய்த்தன்மைத் தாய மாயப்
போர்வையை மெய்யென் றெண்ணும்
வித்தகத் தாய வாழ்வு
வேண்டிநான் விரும்ப கில்லேன்
முத்தினைத் தொழுது நாளும்
முடிகளால் வணங்கு வார்க்கு
அத்தன்மைத் தாகும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே. 9

தஞ்சொலார் அருள் பயக்குந்
தமியனேன் தடமு லைக்கண்
அஞ்சொலார் பயிலும் ஆரூர்
அப்பனை ஊரன் அஞ்சிச்
செஞ்சொலால் நயந்த பாடல்
சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சுலாங் கண்டத் தெங்கள்
நாதனை நணுகு வாரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment