சுரருலகு நரர்கள்பயில் பாடல் வரிகள் (curarulaku nararkalpayil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பிரமபுரம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பிரமபுரம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

சுரருலகு நரர்கள்பயில்

சுரருலகு நரர்கள்பயில் தரணிதலம்
முரணழிய அரணமதில்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள்
கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள்
வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுயர் அரனெழில்கொள் சரணவிணை
பரவவளர் பிரமபுரமே. 1

தாணுமிகு வாணிசைகொள் தாணுவியர்
பேணுமது காணுமளவிற்
கோணுநுதல் நீள்நயனி கோணில்பிடி
மாணிமது நாணும்வகையே
ஏணுகரி பூணழிய வாணியல்கொள்
மாணிபதி சேணமரர்கோன்
வேணுவினை யேணிநகர் காணிறிவி
காணநடு வேணுபுரமே. 2

பகலொளிசெய் நகமணியை முகைமலரை
நிகழ்சரண வகவுமுனிவர்க்
ககலமலி சகலகலை மிகவுரைசெய்
முகமுடைய பகவனிடமாம்
பகைகளையும் வகையில்அறு முகஇறையை
மிகஅருள நிகரிலிமையோர்
புகவுலகு புகழஎழில் திகழநிக
ழலர்பெருகு புகலிநகரே. 3

அங்கண்மதி கங்கைநதி வெங்கண்அர
வங்களெழில் தங்குமிதழித்
துங்கமலர் தங்குசடை யங்கிநிகர்
எங்களிறை தங்குமிடமாம்
வெங்கதிர்வி ளங்குலகம் எங்குமெதிர்
பொங்கெரிபு லன்கள்களைவோர்
வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர
ணங்கள்பணி வெங்குருவதே. 4

ஆணியல்பு காணவன வாணவியல்
பேணியெதிர் பாணமழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை
பேணியற நாணிவிசயன்
பாணியமர் பூணவருள் மாணுபிர
மாணியிட மேணிமுறையிற்
பாணியுல காளமிக வாணின்மலி
தோணிநிகர் தோணிபுரமே. 5

நிராமய பராபர புராதன
பராவுசிவ ராகவருளென்
றிராவுமெ திராயது பராநினை
புராணனம ராதிபதியாம்
அராமிசை யிராதெழில் தராயர
பராயண வராகவுருவா
தராயனை விராயெரி பராய்மிகு
தராய்மொழி விராயபதியே. 6

அரணையுறு முரணர்பலர் மரணம்வர
விரணமதி லரமலிபடைக்
கரம்விசிறு விரகனமர் கரணனுயர்
பரனெறிகொள் கரனதிடமாம்
பரவமுது விரவவிடல் புரளமுறு
மரவையரி சிரமரியவச்
சிரமரன சரணமவை பரவவிரு
கிரகமமர் சிரபுரமதே. 7

அறமழிவு பெறவுலகு தெறுபுயவன்
விறலழிய நிறுவி விரன்மா
மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற
னுறஅருளும் இறைவனிடமாங்
குறைவின்மிக நிறைதையுழி மறையமரர்
நிறையருள முறையொடுவரும்
புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல்
பெறவருளு புறவமதுவே. 8

விண்பயில மண்பகிரி வண்பிரமன்
எண்பெரிய பண்படைகொண்மால்
கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள்
தண்புகழ்கொள் கண்டனிடமாம்
மண்பரியு மொண்பொழிய நுண்புசகர்
புண்பயில விண்படரவச்
சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய்
பண்புகளை சண்பைநகரே. 9

பாழியுறை வேழநிகர் பாழமணர்
சூழுமுட லாளருணரா
ஏழினிசை யாழின்மொழி யேழையவள்
வாழுமிறை தாழுமிடமாங்
கீழிசைகொள் மேலுலகில் வாழரசு
சூழரசு வாழவரனுக்
காழியசில் காழிசெய வேழுலகில்
ஊழிவளர் காழிநகரே. 10

நச்சரவு கச்செனவ சைச்சுமதி
யுச்சியின்மி லைச்சொருகையான்
மெய்ச்சிர மனைச்சுலகி னிச்சமிடு
பிச்சையமர் பிச்சனிடமாம்
மச்சமத நச்சிமத மச்சிறுமியைச்
செய்த வவச்சவிரதக்
கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கள்
நச்சிமிடை கொச்சைநகரே. 11

ஒழுகலரி தழிகலியில் உழியுலகு
பழிபெருகு வழியைநினையா
முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி
குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை
கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன்
வழிமொழிகள் மொழிதகையவே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment