செய்யரு கேபுனல் பாடல் வரிகள் (ceyyaru kepunal) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கீழைத்திருக்காட்டுப்பள்ளி – பர்த்தன்பள்ளி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : கீழைத்திருக்காட்டுப்பள்ளி – பர்த்தன்பள்ளி
சுவாமி : ஆரண்யசுந்தரேஸ்வரர்
அம்பாள் : அகிலாண்டநாயகி

செய்யரு கேபுனல்

செய்யரு கேபுனல் பாயவோங்கிச்
செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்
கையரு கேகனி வாழையீன்று
கானலெல் லாங்கமழ் காட்டுப்பள்ளிப்
பையரு கேயழல் வாயவைவாய்ப்
பாம்பணை யான்பணைத் தோளிபாகம்
மெய்யரு கேயுடை யானையுள்கி
விண்டவ ரேறுவர் மேலுலகே. 1

(இப்பதிகத்தில் 2-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.) 2

திரைகளெல் லாமல ருஞ்சுமந்து
செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்
கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சிக்
காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி
உரைகளெல் லாமுணர் வெய்திநல்ல
உத்தம ராயுயர்ந் தாருலகில்
அரவமெல் லாம்அரை யார்த்தசெல்வர்க்
காட்செய அல்லல் அறுக்கலாமே. 3

தோலுடை யான்வண்ணப் போர்வையினான்
சுண்ணவெண் ணீறு துதைந்திலங்கு
நூலுடை யானிமை யோர்பெருமான்
நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங்
காலுடை யான்கரி தாயகண்டன்
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
மேலுடை யானிமை யாதமுக்கண்
மின்னிடை யாளொடும் வேண்டினானே. 4

சலசல சந்தகி லோடும்உந்திச்
சந்தன மேகரை சார்த்தியெங்கும்
பலபல வாய்த்தலை யார்த்துமண்டிப்
பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய்க்
கலகல நின்றதி ருங்கழலான்
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச்
சொலவல தொண்டர்க ளேத்தநின்ற
சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே. 5

தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல்
தாமரை செங்கழு நீருமெல்லாங்
களையவி ழுங்குழ லார்கடியக்
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித்
துளைபயி லுங்குழல் யாழ்முரலத்
துன்னிய இன்னிசை யால்துதைந்த
அளைபயில்1 பாம்பரை யார்த்தசெல்வர்க்
காட்செய அல்லல் அறுக்கலாமே.

பாடம் : 1 யால் துதைந்து வளைபயில். 6

முடிகையி னாற்றொடு மோட்டுழவர்
முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டிக்
கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி
காதல்செய் தான்கரி2 தாயகண்டன்
பொடியணி மேனியி னானையுள்கிப்
போதொடு நீர்சுமந் தேத்திமுன்னின்
றடிகையி னால்தொழ வல்ல தொண்டர்
அருவினை யைத்துரந் தாட்செய்வாரே.

பாடம் : 2 காதலித்தான் கரி. 7

பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான்
பெய்கழல் நாடொறும் பேணியேத்த
மறையுடை யான்மழு வாளுடையான்
வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
கறையுடை யான்கன லாடுகண்ணாற்
காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
குறையுடை யான்குறட் பூதச்செல்வன்
குரைகழ லேகைகள் கூப்பினோமே. 8

செற்றவர் தம்அர ணம்மவற்றைச்
செவ்வழல் வாயெரி3 யூட்டிநின்றுங்
கற்றவர் தாந்தொழு தேத்த நின்றான்
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
உற்றவர் தாமுணர் வெய்திநல்ல
உம்பருள் ளார்தொழு தேத்த நின்ற
பெற்றமரும்4 பெருமா னையல்லால்
பேசுவ தும்மற்றொர் பேச்சிலோமே.

பாடம் : 3 யூட்டிநன்றும்; 4பெற்றமூரும். 9

ஒண்டுவ ரார்துகி லாடை மெய்போர்த்
துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங்
குண்டர்க ளோடரைக் கூறையில்லார்
கூறுவ தாங்குணம் அல்லகண்டீர்
அண்ட மறையவன் மாலுங்காணா
ஆதியி னானுறை காட்டுப்பள்ளி
வண்டம ரும்மலர்க் கொன்றைமாலை
வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே. 10

பொன்னியல் தாமரை நீலம்நெய்தல்
போதுக ளாற்பொலி வெய்துபொய்கைக்
கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளிக்
காத லனைக்கடற் காழியர்கோன்
துன்னிய இன்னிசை யாற்றுதைந்து
சொல்லிய ஞானசம் பந்தன் நல்ல
தன்னிசை யாற்சொன்ன மாலைபத்துந்
தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment