ஆதியிற் பிரம பாடல் வரிகள் (atiyir pirama) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்குறுக்கை – கொருக்கை தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்குறுக்கை – கொருக்கை
சுவாமி : வீரட்டேசுவரர்
அம்பாள் : ஞானாம்பிகையம்மை

ஆதியிற் பிரம

ஆதியிற் பிரம னார்தாம்
அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவர்
உணருமா றுணர லுற்றார்
சோதியுட் சுடராய்த் தோன்றிச்
சொல்லினை யிறந்தார் பல்பூக்
கோதிவண் டறையுஞ் சோலைக்
குறுக்கைவீ ரட்ட னாரே. 1

நீற்றினை நிறையப் பூசி
நித்தலும் நியமஞ் செய்து
ஆற்றுநீர் பூரித் தாட்டும்
அந்தண னாரைக் கொல்வான்
சாற்றுநாள் அற்ற தென்று
தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலுங்
குறுக்கைவீ ரட்ட னாரே. 2

தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே. 3

சிலந்தியும் ஆனைக் காவிற்
திருநிழற் பந்தர் செய்து
உலந்தவண் இறந்த போதே
கோச்செங்க ணானு மாகக்
கலந்தநீர்க் காவி ரிசூழ்
சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார்
குறுக்கைவீ ரட்ட னாரே. 4

ஏறுடன் ஏழ டர்த்தான்
எண்ணியா யிரம்பூக் கொண்டு
ஆறுடைச் சடையி னானை
அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ்
வேறுமோர் பூக்கு றைய
மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்
கூறுமோர் ஆழி ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே. 5

கல்லினால் எறிந்து கஞ்சி
தாமுணுஞ் சாக்கி யனார்
நெல்லினார் சோறு ணாமே
நீள்விசும் பாள வைத்தார்
எல்லியாங் கெரிகை ஏந்தி
எழில்திகழ் நட்ட மாடிக்
கொல்லியாம் பண்ணு கந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே. 6

காப்பதோர் வில்லும் அம்புங்
கையதோர் இறைச்சிப் பாரந்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத்
தூயவாய்க் கலசம் ஆட்டித்
தீப்பெருங் கண்கள் செய்யக்
குருதிநீர் ஒழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார்
குறுக்கைவீ ரட்ட னாரே. 7

நிறைமறைக் காடு தன்னில்
நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத் தெலிதன் மூக்குச்
சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும்
நீண்டவா னுலக மெல்லாங்
குறைவறக் கொடுப்பர் போலுங்
குறுக்கைவீ ரட்ட னாரே. 8

அணங்குமை பாக மாக
அடக்கிய ஆதி மூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும்
மருந்துநல் அருந்த வத்த
கணம்புல்லர்க் கருள்கள் செய்து
காதலாம் அடியார்க் கென்றுங்
குணங்களைக் கொடுப்பர் போலுங்
குறுக்கைவீ ரட்ட னாரே. 9

எடுத்தனன் எழிற் கயிலை
இலங்கையர் மன்னன் தன்னை
அடுத்தொரு விரலால் ஊன்ற
அலறிப்போய் அவனும் வீழ்ந்து
விடுத்தனன் கைந ரம்பால்
வேதகீ தங்கள் பாடக்
கொடுத்தனர் கொற்ற வாணாள்
குறுக்கைவீ ரட்ட னாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment