Kamatchi amman virutham tamil lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் காமாட்சி அம்மன் விருத்தம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
============
கணபதி காப்பு
மங்களஞ்சேர் காஞ்சிநகர் மன்னுகாமாட்சி மிசை
துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே — திங்கட்
புயமருவும் பணியனியும் பரமனுளந்தனின் மகிழும்
கயமுகவைங் கரனிருதாள் காப்பு.
============
ஆசிரிய விருத்தம்
சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி
சோதியாய் நின்ற உமையே,
சுக்ர வாரத்திலுனை கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கி விடுவாய்,
சிந்தைதனிலுன் பாதந் தன்னையே தொழுபவர்கள்
துயரத்தை மாற்றி விடுவாய்,
ஜெகமெலா முன் மாய்கை புகழவென்னா லாமோ
சிறியனால் முடிந்திடாது.
சொந்தவுன் மைந்தனா யெந்தனை யிரட்சிக்கச்
சிறிய கடன் உன்னதம்மா,
சிவ சிவ மஹேஸ்வரி பரமனிட யீஸ்வரி
சிரோன்மணி மனோன் மணியுநீ
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
யனாத ரட்சகியும் நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 1 ]
பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகந் தண்டை கொலுசும்,
பச்சை வைடூரியம் மிச்சையா இழைத்திட்ட
பாதச் சிலம்பினொலியும்
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலை யழகும்,
முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
முடிந்திட்ட தாலி யழகும்,
சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
செங்கையிற் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
சிறுகாது கொப்பி னழகும்
அத்திவரதன் தங்கை சக்தி சிவரூபத்தை
யடியனாற் சொல்ல திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 2 ]
கெதியாக வுந்தனைக் கொண்டாடி நினதுமுன்
குறைகளைச் சொல்லி நின்றும்,கொடுமையா
யென்மீதில் வறுமையாய் வைத்து நீ
குழப்பமா யிருப்பதேனோ,
சதிகாரியென்று நானறியாம லுந்தனைச்
சதமாக நம்பி னேனே,
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
சாதக னக் கில்லையோ?
மதிபோல வொளியுற்ற புகழ்நெடுங் கரமுடைய
மதகஜனை யீன்ற தாயே,
மாயனிட தங்கையே பரமனது மங்கையே
மயானத்தில் நின்ற வுமையே
அதிகாரி யென்றுநா னாசையால் நம்பினேன்
அன்பு வைத்தென்னை யாள் வாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 3 ]
பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்தும் வளர்ந்துநான்
பேரான ஸ்தலமு மறியேன்,
பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்
போற்றிக் கொண்டாடி யறியேன்
வாமியென் றுன்னைச் சிவகாமி யென்றே சொல்லி
வாயினாற் பாடியறியேன்.
மாதா பிதாவினது பாதத்தை நானுமே
வணங்கியொரு நாளுமறியேன்,
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு
சாஷ்டாங்க தெண்டனிட்டறியேன்,
ஆமிந்த பூமியிலடியனைப் போல் மூடன்
ஆச்சிநீ கண்ட துண்டோ,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 4 ]
பெற்றதா யென்றுன்னை மெத்தவும் நம்பிநான்
பிரியமா யிருந்தே னம்மா
பித்தலாட்டக் காரியென்று நானறியாது உன்
புருஷனை மறந்தே னம்மா,
பக்தனாயிருந்து உன் சித்தமும் இரங்காமல்
பாராமுகம் பார்த்திருந்தால்
பாலன் யானெப்படி விசனமில் லாமலே
பாங்குட னிருப்பதம்மா,
இத்தனை மோசங்க ளாகாது ஆகாது
இது தர்மமல் லவம்மா,
எந்தனை ரக்ஷிக்க சிந்தனை களில்லையோ
யிது நீதி யல்ல வம்மா
அத்தி முகனாசையா லிப்புத்திரனை மறந்தாயோ
அதை யெனக்கருள் புரிகுவாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 5 ]
மாயவன் தங்கை நீ மரகத வல்லிநீ
மணிமந்திர காரிநீயே
மாயசொ ரூபிநீ மகேஸ்வரியு மானநீ
மலையரை யன்மக ளானநீ
தாயே மீனாட்சிநீ சற்குண வல்லிநீ
தயாநிதி விசாலாட்சிநீ,
தாரணியில் பெயர் பெற்ற பெரிய நாயகியும்நீ
சரவணனை யீன்ற வளும்நீ
பேய்களுடனாடிநீ அத்தனிட பாகமதில்
பேறுபெற வளர்ந்த வளும்நீ,
பிரணவசொரூபிநீ பிரசன்ன வல்லிநீ
பிரியவுண் ணாமுலையுநீ
ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீ
அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 6 ]
பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
புத்திகளைச் சொல்லவில்லையோ,
பேய்பிள்ளை யானாலும் தான் பெற்ற பிள்ளையை
பிரியமாய் வளர்க்க வில்லையோ
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்
கதறி நானழுத குரலில்,
கடுகதனிலெட்டிலொரு கூறுவதி லாகிலுன்
காதி னில் நுழைந்த தில்லையோ,
இல்லாத வன் மங்களென் மீதிலேனம்மா
இனி விடுவதில்லை சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வது
இதுதரும மல்ல வம்மா,
எல்லாரு முன்னையே சொல்லியே யேசுவார்
அது நீதியல்ல வம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 7 ]
முன்னையோர் சென்மாந்திர மேனென்ன பாவங்கள்
இம் மூடன் செய்தா னம்மா
மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டி
மோசங்கள் பண்ணினேனோ,
என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே
இக்கட்டு வந்த தம்மா,
ஏழைநான் செய்தபிழை தாய்பொறுத்தருள் தந்து
என்கவலை தீரு மம்மா.
சின்னங்களாகாது ஜெயமில்லையோ தாயே
சிறுநாண மாகுதம்மா,
சிந்தனைக ளென்மீதில் வைத்து நற்பாக்கியமருள்
சிவசக்தி காமாட்சி நீ
அன்னவாகனமேறி யானந்தமாக வுன்
அடியேன் முன்வந்து நிற்பாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 8 ]
எந்தனைப் போலவே செனன மெடுத்தோர்கள்
இன்பமாய் வாழ்ந் திருக்க,
யான் செய்த பாவமோ யித்தனை வறுமையினுள்
உன்னடியேன் தவிப்பதம்மா,
உன்னையே துணையென் றுறுதியாய் நம்பினேன்
உன் பாதஞ் சாட்சியாக
உன்னையன்றி வேறுதுணை யினியாரை யுங்காணேன்
உலகந்தனி லெந்தனுக்கு
பிள்ளை யென்றெண்ணி நீ சொல்லாம லென்வறுமை
போக்கடித் தென்னைரட்சி,
பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்
பிரியமாய்க் காத்திடம்மா,
அன்னையே யின்னமுன்ன டியேனை ரட்சிக்க
அட்டி செய்யா தேயம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 9 ]
பாரதனிலுள்ளவும் பக்கியத்தோடென்னைப்
பாங்குட னிரட்சிக்கவும்
பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த
பாலருக் கருள் புரியவும்,
சீர்பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலிய னணு காமலும்,
சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து
ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்,
பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமற்
பிரியமாய்க் காத்திடம்மா,
பிரியமாயுன்மீதில் சிறுயனான் சொன்னகவி
பிழைகளைப் பொறுத்து ரட்சி,
ஆறதனில் மணல் குவித் தரியபூசை செய்தவென்
னம்மையேகாம்பரி நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 10 ]
எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னி லம்மா,
இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
இனி ஜெனன் மெடுத் திடாமல்,
முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்
முக்காலும் நம்பி னேனே,
முன்பின்னுந் தோணாத மனிதரைப் போலநீ
முழித்திருக் காதே யம்மா,
வெற்றி பெற வுன்மீதில் பக்தியாய் நான் சொன்ன
விருத்தங்கள் பதினொன்றையும்,
விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை
விமலனா ரேசப் போறார்.
அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்
அருங்குறை யைத்தீரு மம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 11 ]
============
மாங்கல்ய தோஷம் போக்கும் சுமங்கலி நோன்பு
மாசியும், பங்குனியும் சேரும் வேளையில் காரடையான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சம்பத் கவுரி விரதம், காமாட்சி நோன்பு, சாவித்ரி விரதம், சுமங்கலி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரதத்துக்கு முக்கிய காரணமாக சத்யவான்- சாவித்ரி கதை சொல்லப்படுகிறது.
இதனை சாவித்ரி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. சாவித்ரி காட்டில் அடை செய்து படைத்தமையால் காரடையான் நோன்பு என்று அழைக்கின்றனர். ற்பில் சிறந்தவளான சாவித்திரி தன்னுடைய கணவனின் ஆயுள் காலம் முடிந்து யமதேவன் அவனுடைய உயிரைப் பரித்துச் சென்ற போதிலும், யமனுடனிமிருந்து மீட்டு வந்தாள் என்று நம்பப்படுகிறது. சாவித்ரி ஆனிமாத அமாவாசையிலிருந்து மூன்று நாட்கள் விரதம் மேற்கொண்டாள். இந்த காலத்தினை சாவித்ரி விரத கல்பம் என்கின்றனர்.
திரியுமத்சேனன் மன்னனின் மகன் சத்யவான். அசுபதி மன்னின் மகள் சாவித்திரி. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சாவித்திரி கவுரி விரதத்தினை மேற்கொண்டிருந்தாள். அந்த விரதக் காலத்திலேயே சத்யவான் காட்டில் இறந்தார்.
தான் மேற்கொண்ட கவுரி விரதத்தினை முடிக்க மண்ணால் செய்த வடையை செய்து வழிபட்டாள். விரதம் பூர்த்தியானது. அதன் பின்பு யமதர்மனிடம் வேண்டி தன்னுடைய கணவனை மீட்டாள்.
============
காரடையான் நோன்பு
============
பூஜை செய்யும் முறை
நோன்பு நாளில், பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து தலைக்கு குளிக்க வேண்டும். வீட்டு வாசலிலும் பூஜையறையிலும் கோலமிட வேண்டும். அதன் மீது ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அதன் மீது நுனி வாழை இலையை வைத்து, இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையில், வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழங்களும் வைக்க வேண்டும். அதன் மீது நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும்.
பின்னர் அந்த அடையை நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு தாலிச்சரடையும் நோன்புச் சரடையும் கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். அதேபோல காரடையான் நோன்பு அன்று சொல்ல வேண்டிய சில ஸ்லோகங்களை கூறி பிராத்திக்க வேண்டும்.
நம்பிக்கையுடனும், பக்தி சிரத்தையுடனும் இந்த நோன்பை கடைபிடித்தால் கணவன் – மனைவி இடையே இருக்கும் பூசல்கள், கருத்து வேறுபாடுகள் நீங்கி பாசமும், நேசமும், அன்யோன்யமும் அதிகரிக்கும்.பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடுவார்கள். பெண்களின் ஜாதகத்தில் இருக்கும் அஷ்டம ஸ்தான தோஷங்கள், மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். குழந்தை பாக்கிய தடை நீங்கி வம்சம் விருத்தியாகும். இந்த நோன்பில் கலந்து கொள்ளும் கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள், தடைகள் நீங்கி அவர்களது கல்யாண கனவுகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இந்த காமாட்சி அம்மன் விருத்தம் | kamatchi amman virutham பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Kamatchi Amman songs, காமாட்சி அம்மன் பாடல்கள் காமாட்சி அம்மன் விருத்தம் காமாட்சி அம்மன் விருத்தம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…